பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாக உள்ளது. கலந்தாய்வு குறித்த அட்டவணையும் இன்று வெளியாகிறது. 


2024- 2025ஆம் ஆண்டிற்கான பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பதிவு கடந்த மே மாதம் 6ஆம் தேதி தொடங்கியது.  இந்த விண்ணப்பதிவு கடந்த ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. 


ஆனால் அவகாசம் கேட்டு பலர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து விண்ணப்பதிவுக்கான கால அவகாசம் அதிகரிக்கப்பட்டது. அதாவது கடந்த மாதம் 10ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதிகளில் விண்ணப்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. 


இதையடுத்து விண்ணப்ப பதிவு முடிவடைந்தது. தொடர்ந்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பபதிவு செய்திருந்ததாக தகவல் வெளியிட்டது. 


மேலும், விண்ணப்பபதிவு செய்தவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்தியிருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 93ஆயிரத்து 853 பேர் மட்டுமே சாண்றிதழ்கள் பதிவேற்றம் செய்திருந்தனர். 


இதைத்தொடர்ந்து கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. கடந்த 12ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்ட அடுத்த நாளிலிருந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு 30ஆம் தேதி வரை நடைபெற்றது. 


இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வு அட்டவனையும் இன்று வெளியாக இருக்கிறது. 


முன்னதாக, சரியாக விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி, சான்றிதழ் சரிபார்ப்பும் சரியாக முடித்தவர்களுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அடுத்து வந்த அறிவிப்பில் தரவரிசை பட்டியல் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தரவரிசை பட்டியல் வெளியாக இருக்கிறது.