முன்னேறிவரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவ-மாணவியர்கள் தங்களது திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என உயர்கல்விக்கு வழிகாட்டும் என் "கல்லூரி கனவு" நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் அறிவுறுத்தினார்.




 


 




 


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக 12- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுச் செல்லும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் "என் கல்லூரி கனவு" நிகழ்ச்சி 2 ஆம் கட்டமாக கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல்  தலைமையில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பாடவாரியான பட்டப்படிப்புகள். பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் தலைசிறந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது.


 




 


இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவ-மாணவியர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும். "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் "என் கல்லூரி கனவு"நிகழ்ச்சி இத்தருணத்தில் இரண்டாம் கட்டமாக நடத்தப்படுவது மாணவ - மாணவியர்களுக்கு மிகுந்த பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. அந்த வகையில் இன்றையதினம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மாணவ - மாணவியர்கள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.


 




 


குறிப்பாக எதிர்காலத்தில் எந்தெந்த துறைகளில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. முன்னேறிவரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவ, மாணவியர்கள் தங்களது திறன்களை எவ்வாறு மென்மேலும் வளர்த்துக்கொள்ளலாம் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்களை துறை வல்லுநர்கள் இந்நிகழ்ச்சியில் எடுத்துரைக்கின்றனர். மாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்கும் உயர்கல்வி படிப்பிற்கான இச்சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சியினை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அலுவலர் சண்முக வடிவேல் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை உயர் அலுவலர்கள், துறை வல்லுநர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.