2022- 23ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, கல்விச் சுற்றுலா செல்ல 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கு பாஸ்போர்ட் பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


2022-23 ஆம்‌ ஆண்டிற்கான பள்ளிக்‌ கல்வித்‌ துறை மானியக்‌ கோரிக்கையில்‌  பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளி அளவில்‌ கல்வி மற்றும்‌ இணைச்‌ செயல்பாடுகளான மன்றச்‌ செயல்பாடுகள்‌, நூல்‌ வாசிப்பு, நுண்‌ கலைகள்‌, விளையாட்டு மற்றும்‌ அறிவியல்‌ ஆகியவற்றில்‌ சிறந்து விளங்கும்‌ மாணவர்கள்‌ உலக அளவிலும்‌, தேசிய / மாநில அளவிலும்‌ புகழ்பெற்ற கூடங்களுக்குக்‌ கல்விச்‌ சுற்றுலா அழைத்துச்‌ செல்லப்படுவர்‌. இத்திட்டம்‌ ரூ.3 கோடி மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்படும்‌" என்ற அறிவிப்பினை வெளியிட்டார்‌.


2022-2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மன்றச் செயல்பாடுகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகள், சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போன்றவற்றை ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவப்பட்டது. இதற்கென ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


கலை, விளையாட்டு, வானவில் மன்றம், இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகள் மற்றும் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் போன்ற செயல்பாடுகளில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. பின்பு மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.


மேற்காண், 6 செயல்பாடுகளில் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் மாநில அளவில் தலா 25 மாணவர்கள் என மொத்தம் 150 மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு செயல்பாடுகளிலும் மாணவர்களுக்கு வழிகாட்டி ஆசிரியர்களில் தலா 5 ஆசிரியர்கள் என மொத்தம் 30 ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கல்விச் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்து இதற்கென அளிக்கப்பட்டுள்ள படிவத்தில் கல்விச் சுற்றுலா செல்ல ஒப்புதல் பெறவேண்டும். மேலும், தங்கள் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்கள் மாவட்டத்திற்கு அருகாமையிலுள்ள மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு (Regional Passport Office) (சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மண்டலம்) விண்ணப்பித்து கடவுச் சீட்டு பெற்று 13.04.2023-க்குள் பள்ளிக் கல்வி ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். 


இவ்வாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.