10, 11 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் மார்ச் 16 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையத்தில் பதியலாம். தனித்தேர்வர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

அதேபோல், விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி வருகின்ற மார்ச் 18 முதல் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது. தட்கல் முறையில் 10 ம் வகுப்புக்கு ரூ. 500, 11 மற்றும் 12 ம் வகுப்புக்கு தேர்வு கட்டணத்துடன் ரூ. 1000 செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திகுறிப்பில்,

Continues below advertisement

நடைபெறவுள்ள மே 2022, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணைய தளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள்

ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (+1) தேர்வெழுதி பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதுவதற்கும், முதலாம் ஆண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்

மே 2022, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், 09.03.2022 (புதன் கிழமை) முதல் 16.03.2022 (புதன் கிழமை) வரையிலான நாட்களில் (13.03.2022 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு (Service centres) நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

தக்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள்

மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 18.03.2022 (வெள்ளிக்கிழமை) முதல் 21.03.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (20.03.2022 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்-லைனில் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள்

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் (Government Examinations Service centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.

தேர்வுக்கால அட்டவணை

மே 2022, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பொதுவான அறிவுரைகள்:

தனித்தேர்வர்கள் மே 2022 பொதுத் தேர்வெழுதுவதற்கு விண்ணப்பிக்க, சேவை மையங்களுக்கு வரும் பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். போதிய சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண