தமிழகத்தின்‌ உரிமையையும்‌, அதிகாரத்தையும்‌ பறிக்கும்‌ வகையில்‌,பொது கலந்தாய்வு மூலம்‌ இளநிலை மருத்துவப்‌ படிப்பில்‌ மாணவர்‌ சேர்க்கை நடத்தப்படும்‌ என்று தேசிய மருத்துவக்‌ குழுமம்‌ அறிவித்ததை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.


இதுகுறித்து அதிமுக‌ பொதுச்‌ செயலாளர்‌, சட்டமன்ற எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:


''இந்தியாவிலேயே மாநில நிதியில்‌ உருவாக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மருத்துவக்‌ கல்லூரிகள்‌; இளநிலை மற்றும்‌ முதுநிலை மருத்துவ இடங்களைக்‌ கொண்ட மாநிலம்‌ தமிழ்‌ நாடு. 2011-ல்‌  திமுக ஆட்சியில்‌ 1,945 ஆக இருந்த எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள்‌, 2021-ல்‌ அதிமுக ஆட்சியில்‌ தனியார்‌ மருத்துவப்‌ பல்கலைக்கழகங்களில்‌ உள்ள இடங்களையும்‌ சேர்த்து சுமார்‌ 12,500-க்கும்‌ மேலாக அதிகரிக்கப்பட்டது சாதனையாகும்‌. 


அதிமுக‌ அரசு ஒரே ஆண்டில்‌ 11 புதிய மருத்துவக்‌ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்று அதன்மூலம்‌ 1,650 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களை கூடுதலாகப்‌ பெற்று சாதனை படைத்தது. இதைக்கூட இந்த  திமுக அரசு தக்க வைத்துக்கொள்ள இயலாமல்‌ தடுமாறிக்கொண்டிருப்பதை தமிழக மக்கள்‌ நன்கு அறிவார்கள்‌.


மருத்துவத்‌ துறையிலும்‌, மருத்துவக்‌ கல்வியிலும்‌, இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத்‌ தமிழகம்‌ திகழ்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த 69 சதவீத இட ஒதுக்கீடு, நான் கொண்டு வந்த அரசுப்‌ பள்ளிகளில்‌ படிக்கும்‌ மாணவர்களுக்கு வரலாற்றுச்‌ சிறப்பு மிக்க 7.5 சதவீத உள்‌ இட ஒதுக்கீடு ஆகியவற்றின்‌ மூலம்‌ சமூக சமத்துவம்‌ தமிழ்‌ நாட்டில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சியில்‌ நிலைநாட்டப்பட்டுள்ளது.


நா.ஜி.ஆர்‌.,  ஜெயலலிதா ஆகியோர்‌ வழியில்‌, மாநில சுயாட்சி என்ற கொள்கையில்‌ நாம்‌ உறுதியாக இருக்கிறோம்‌. எந்த நிலையிலும்‌ தமிழ்‌நாட்டின்‌ உரிமையைப்‌ பறிக்கின்ற எந்த சட்டத்தையும்‌ அதிமுக ஆதரித்ததில்லை. நாடாளுமன்றத்தில்‌ தேசிய மருத்துவக்‌ குழுமம்‌ சட்ட மசோதாவை கொண்டு வந்தபோதே, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ தங்களது எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில்‌ தமிழகத்தின்‌ உரிமையையும்‌, அதிகாரத்தையும்‌ பறிக்கும்‌ வகையில்‌, இளநிலை மருத்துவப்‌ படிப்பில்‌ அகில இந்திய அளவில்‌ பொது கவுன்சிலிங்‌ நடத்தப்படும்‌ என்ற மத்திய அரசின்‌ அறிவிப்பாணை ஏற்புடையதல்ல. இதனை மறு பரிசீலனை செய்து மீண்டும்‌ தற்போதுள்ள நடைமுறையிலேயே எம்பிபிஎஸ் மருத்துவ சேர்க்கையை நடத்த வேண்டும்‌ என்று அதிமுக‌ சார்பில்‌ நான் தேசிய மருத்துவக்‌ குழுமத்தை வலியுறுத்துகிறேன்‌''.


இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.