மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி நிதியை பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கியுள்ளது.


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான மழை பெய்தது. தொடர்ச்சியாகப் பெய்த மழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், வெள்ளம் சூழ்ந்து நிலைகுலைந்து போயின. அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில், ஐந்தாவது நாளாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (8.12.2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 வட்டங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


11ஆம் தேதி பள்ளிகள் திறப்பு


இதைத் தொடர்ந்து டிசம்பர் 11ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து கீழ்க்குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.


* பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும்போது அவர்களுக்கு நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கி தருவதை உறுதி செய்யவேண்டும்.


* பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும். வளாகத்தில் முட்புதர்கள் இருப்பின் அவை அகற்றப்பட வேண்டும்.


* தொடர் மழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் இருக்கலாம். எனவே சுற்றுச்சுவரில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்படவேண்டும்.


* வளாகத்தில் இருக்கும் உடைந்த பொருட்களையும் கட்டிட இடிபாடுகளையும் அகற்ற வேண்டும்.


* மழையின் காரணமாக பள்ளிகளில் சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை பயன்படுத்தாமல் பூட்டி வைப்பதோடு, அவற்றின் அருகில் மாணவர்கள் செல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.


* பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் முழுவதும் ஆய்வு செய்து விஷ ஜந்துக்கள் இல்லாததை உறுதிசெய்ய வேண்டும். மின்கசிவு, மின்சுற்று கோளாறுகள் இருந்தால் அதனை ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும். தேவையென்றால் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கலாம்.


* கட்டிடங்களின் மேற்கூரைகள் சுத்தம் செய்யப்பட்டு, மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


* புயல் மழையினால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்த தேவைப்படும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை வழங்கிட தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியது.


பள்ளிக் கல்வி இயக்குநர் நேரில் ஆய்வு


இந்த நிலையில் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இன்று (நவ.8) முதல் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து பள்ளிகளில் நடந்து வரும் தூய்மைப்பணி மற்றும் ஏற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி நேரில் இன்று பார்வையிட்டார். விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஆய்வு நடத்தப்பட்டது.


அதேபோல தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கத்தைச் சுற்றியுள்ள பள்ளிகளைப் பார்வையிட்டார்.


ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு


இந்த நிலையில், பள்ளிகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தவும், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி நிதியை பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கியுள்ளது.