12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், 94.56 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7.6 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:


கலை, தொழில் பாடப் பிரிவுகளைக் காட்டிலும் அறிவியல் பாடப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.35 சதவீத மாணவர்கள் அறிவியல் பாடப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதேபோல அறிவியல் பாடங்களிலும் தேர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது. இயற்பியல் பாடத்தில், 98.48 சதவீதமும் வேதியியல் பாடத்தில் 99.14 சதவீதமும் தேர்ச்சி உள்ளது. ஒட்டுமொத்தத் தேர்ச்சி உயிரியல் பாடத்தில் 99.35 சதவீதமாகவும் கணிதத்தில் 98.57 சதவீதமாகவும் உள்ளது.


சதங்களின் எண்ணிக்கை என்ன?


முக்கிய பாடங்களான இயற்பியலில் 633 மாணவர்களும், வேதியியலில் 471 மாணவர்களும் சதம் அடித்துள்ளனர். உயிரியியலில் 652 மாணவர்களும், கணக்கு பாடத்தில் 2,587 மாணவர்களும், கணினி அறிவியல் பாடத்தில் 6,996 மாணவர்களும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். வரலாற்றிலேயே முதல்முறையாக 26 ஆயிரத்து 352 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.


இந்த நிலையில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைப் பொறுத்து, எந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என யோசித்து வருகின்றனர்.


இந்த நிலையில் ABP Nadu-க்குக் கல்வி ஆலோசகர் அஸ்வின் பிரத்யேகப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,


’’2023 மற்றும் 2024 மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில், கடந்தாண்டு இயற்பியல் பாடத்தில் 812 பேர் சதம் அடித்தனர். இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் 633 பேர் மட்டுமே சதமடித்த நிலையில் 179 அளவுக்கு சதம் குறைந்துள்ளது. அதேபோல, வேதியியலில் 3,438 அளவுக்கு சதம் குறைந்துள்ளது. கணக்கு பாடத்தில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 1, 897ஆக அதிகரித்துள்ளது.


பொதுவாக பொறியியல் படிப்பிற்கான கட்ஆப் மதிப்பெண்கள் கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படும். கணித பாடத்துக்கு கட் ஆஃப் 1, இயற்பியல் கட் ஆஃப் 0.5, வேதியியல் கட் ஆப் 0.5 என கணக்கிடப்படும்.
இயற்பியல், வேதியியலைச் சேர்த்தால் 1 மதிப்பெண் என்ற பட்சத்தில் சுமார் 215 மாணவர்கள் மட்டும் உந்த வாய்ப்பு இருக்கிறது.


கட்-ஆப் மதிப்பெண்கள் எப்படி மாறும்?


பொறியியல் படிப்பிற்கான கட் ஆப் மதிப்பெண்கள் பெரும்பாலும் கடந்தாண்டு போல்தான் இருக்கும். எனினும் 195 முதல் 200 வரையிலான கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு, 1 கட் ஆஃப் மதிப்பெண் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.


அதேபோல 195 கட்ஆப் மதிப்பெண்ணுக்குக் கீழே மதிப்பெண் பெற்றவர்களுக்கு 0.5 கட் ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டை விடக் குறையும். அதாவது கடந்த ஆண்டு 195 கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்குக் கிடைத்த கல்லூரி, இந்த ஆண்டு 194.5 கட் ஆஃப் பெற்றவர்களுக்கே கிடைக்கும். பிறகு 190 மதிப்பெண் முதல் 185 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கு கடந்த ஆண்டை ஒப்பிடும்போது எந்த மாற்றமும் இருக்காது. 180 மதிப்பெண்கள் வரை 0.5 கட் ஆட் மதிப்பெண்கள் அதிகரிக்கும். இதேபோக்கு தொடர்ந்து நீடிக்கும். இதனால் கட் ஆஃப் மதிப்பெண்களில் பெரிய மாற்றம் இருக்காது.




 கால்நடை மருத்துவம், மீன்வளத்துக்கு எப்படி?


கால்நடை மருத்துவ அறிவியல், மீன்வள அறிவியல் படிப்புக்கும், இதே கட் ஆஃப்தான் கணக்கிடப்படும். இந்த முறை உயிரியல் பாடத்தில் சதம் 800 அளவுக்குக் குறைந்திருக்கிறது. இதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு கட்ஆப் மதிப்பெண்கள் குறையப்போகின்றன.


இதனால், கட்ஆப் மதிப்பெண்கள் 2 முதல் 3 வரையில் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறைவான இடங்களே இருப்பதால், பெரிய அளவில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பில்லை.


வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை          படிப்புகளில் சேர்வதற்கு 4 பாடங்களின் மதிப்பெண்களைக் கொண்டு, கட்ஆப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல் கணக்கு பாடப்பிரிவு ஆகியவற்றின் கட்- ஆஃப் கணக்கிடப்படும். அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் 4 வது பாடமாக கணினி அறிவியல் கூட எடுத்துக்கொள்ளப்படும். இந்த ஆண்டு கணினி அறிவியல் எடுத்துப் படித்தவர்களுக்கு வேளாண்மைக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு நன்றாக இருக்கிறது. ஏனெனில் இதில் அதிக சதம் இந்த முறை எடுக்கப்பட்டிருக்கிறது.


வேளாண்மை படிப்புகளுக்கு சென்ற ஆண்டை விட நடப்பு ஆண்டில் கட்ஆஃப் மதிப்பெண்களில் பெரிய மாற்றம் இருக்காது’’.


இவ்வாறு கல்வி ஆலோசகர் அஸ்வின் ஏபிபி நாடுவிடம் தெரிவித்தார்.