ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சென்னை அசோக் நகரில் சிறப்பு விருந்தினர் கலந்துகொண்டு பேசிய விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, இனி அது போன்ற சம்பம் நடைபெறாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் மகா விஷ்ணு என்னும் பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர்.


மூட நம்பிக்கை அகங்காரப் பேச்சு


அவர், மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம், மாற்றுத் திறனாளிகளாகப் பிறக்கவும் அதுவே காரணம் என்று பேசியுள்ளார். மறு பிறவி, பாவம், புண்ணியம், பிரபஞ்ச சக்தில் பூமியில் இறங்கும் என்றெல்லாம் மகா விஷ்ணு கூறி இருந்தார். இதுதொடர்பான வீடியோக்கள் இனையத்தில் வைரலாகின. 


இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!" என்று தெரிவித்து இருந்தார். 


இந்த நிலையில், இனி சர்ச்சைக்குரிய வகையில் பேச்சாளர்கள் அரசுப் பள்ளிகளில் பேசுவது போன்ற சம்பம் நடைபெறாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


பேச்சாளர்களின் பின்னணி குறித்து அறிந்தபிறகே அழைக்க வேண்டும்


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’தவறுக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இனி சர்ச்சைக்குரிய வகையில் பேச்சாளர்கள் அரசுப் பள்ளிகளில் பேசுவது போன்ற சம்பவம் நடைபெறாது. பேச்சாளர்களின் பின்னணி குறித்து அறிந்தபிறகே, அவர்களை பள்ளிகளுக்கு அழைக்க வேண்டும். மாணவர்கள் எந்த விஷயத்தையும் பகுத்தறிந்துதான் செயல்பட வேண்டும். 


யாராக இருந்தாலும் 3 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை


தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் நடவடிக்கை இருக்கும். சர்ச்சைக்குரிய சொற்பொழிவைக் கேட்டபோது எல்லோருக்கும் ஏற்பட்ட உணர்வுதான் முதலமைச்சரும் எனக்கும் ஏற்பட்டது. தவறுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் 3 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.