தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்படிப்பு, பட்டயம், பட்டபடிப்பு படிக்க செல்லும் போது மாதம்தோறும்  1000 ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற  பெரிய திட்டத்தை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலம் அதிகப்படியாக மாணவிகள் உயர் கல்வி கற்பதோடு அரசு பள்ளியில் படிப்பதற்கு பெற்றோர்கள் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போதைக்கு அரசு பள்ளிக்கு மட்டும் தான் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். 




கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் தாமதமாக தான் திறக்கப்பட்டுள்ளன. மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது. மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் தான் சொல்ல முடியும். பேராசிரியர் அன்பழகனார் மேம்பாட்டு திட்டத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள், முதற்கட்டமாக இந்தாண்டு 1300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள், குறைந்தபட்சமாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் பள்ளி கழிப்பறைகள், ஆய்வு கூடம், பள்ளி வளாகத்தில் என்னென்ன தேவையோ அத்தனை கட்டிடங்களும் கட்டப்படும்.  




கடந்த மாதம் சேலத்தில் நடந்த மண்டல ஆய்வின் போது மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கையெடுகள் அறிமுகப்படுத்தி உள்ளோம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய 44 பகுதிகளில் சுமார் 2.25 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் எவ்வாறு பயிற்றுவிக்க வேண்டும் என்பது குறித்து 1100 ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் வகையில் முதற்கட்டமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி கையெடுகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.