பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப்‌ போட்டியை சிஐசிடி எனப்படும் செம்மொழித்‌ தமிழாய்வு மத்திய நிறுவனம்‌ அறிவித்துள்ளது. காசி தமிழ்ச் சங்கமம் 3.O-ஐ முன்னிட்டு அகத்தியர் குறித்த கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியக்‌ கல்வி அமைச்சகம்‌ மற்றும்‌ பாரத மொழிகளின் குழு வழிகாட்டுதலின்படி எதிர்வரும்‌ காசித்‌ தமிழ்ச்‌ சங்கமம்‌ - 3.0இன்‌ மையப்‌ பொருண்மையான அகத்திய மாமுனிவரின்‌ பங்களிப்பை எடுத்துரைக்கும்‌ விதமாகச்‌ செம்மொழித்‌ தமிழாய்வு மத்திய நிறுவனம்‌ பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக்‌ கட்டுரைப்‌ போட்டியை நடத்த உள்ளது.

“என்றுமுள தென்தமிழ்‌ இயம்பி இசைகொண்டான்‌” என்று கம்பரால்‌ புகழப் பெறும்‌ அகத்திய மாமுனிவர்‌ பதினெண்‌ சித்தர்களில்‌ தலைசிறந்தவர்‌; தமிழின்பால்‌ மாளாக்‌ காதல்கொண்டு தென்னகம்‌ வந்து பொதிகையில்‌ வாழ்ந்தவர்‌; இயல்‌, இசை, கூத்து என்னும்‌ முத்தமிழுக்கும்‌ இலக்கணம்‌ கூறும்‌ அகத்தியம்‌ என்னும்‌ நூலை இயற்றிய தமிழின் முதல்‌ இலக்கணி; உடற்பிணியும்‌ உளப்பிணியும்‌ பிறவிப்பிணியும்‌ போக்கப் பன்னூல்களைத்‌ தண்டமிழில்‌ யாத்த மருத்துவர்‌. மருத்துவம்‌ மட்டுமல்லாமல் அளவையியல்‌, சோதிடம்‌, யோகம்‌, ஞானம்‌, வர்மம்‌ முதலான துறைகளில்‌ இவர்‌ இயற்றியுள்ள நூல்கள்‌ எண்ணற்றவை.

சித்த மருத்துவ நாள்

சித்த மருத்துவத்‌ துறையில்‌ இவர்‌ ஆற்றிய பங்களிப்பைச்‌ சிறப்பிக்கும்‌ விதமாக ஆண்டுதோறும்‌ மார்கழி மாதம்‌ ஆயில்ய நட்சத்திர நாளானது தேசியச்‌ சித்த மருத்துவ நாளாகக்‌ கொண்டாடப்படுகிறது.

இத்தகைய பெருமைக்குரிய அகத்திய மாமுனிவரின்‌ பங்களிப்புக்‌ குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும்‌ என்ற நோக்கோடு இந்தக் கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.

கட்டுரைப்‌ போட்டியின்‌ விவரம்‌ வருமாறு:

  1. பள்ளி மாணவர்கள் 9- 12ஆம்‌ வகுப்பு - அருந்தமிழ்‌ கண்ட அகத்தியர்‌
  2. கல்லூரி/ பல்கலைக்கழக மாணவர்கள்‌ - இளங்கலை/ முதுகலை -அகத்தியர்‌ காட்டும்‌ அறிவியல்‌

கட்டுரைப்‌ போட்டிக்கான விதிமுறைகளும்‌ விவரங்களும்‌

* பள்ளி, கல்லூரி/பல்கலைக்கழக மாணவர்கள்‌ மட்டுமே போட்டிகளில்‌ பங்கேற்க வேண்டும்‌.

* பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை 5 பக்கத்திற்கு மிகாமலும்‌ கல்லூரி/ பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரை 8 பக்கங்களுக்கு மிகாமலும்‌ அமைய வேண்டும்‌.

* தமிழ்‌ மொழியில்‌ மட்டுமே கட்டுரை அமையப்பெற்றிருக்க வேண்டும்.

* தட்டச்சு செய்யாமல்‌ கையெழுத்துப்‌ படியாக அனுப்பிவைக்க வேண்டும்‌.

* கட்டுரையினைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்‌/ கல்லூரி முதல்வர்‌/ துறைத் தலைவர்‌/ நிறுவன இயக்குநர்‌ ஒப்புதலுடன்‌ அனுப்பிவைக்கப்பட வேண்டும்‌.

* உரிய முறையில்‌ வரப்பெறாத கட்டுரை ஏற்கப்பட மாட்டாது.

* ஒவ்வொரு பிரிவிலும்‌ தலா மூன்று பேருக்குப்‌ பரிசுகள்‌ வழங்கப்படும்.

முதல்‌ பரிசு ரூ. 30,000/-,

இரண்டாம்‌ பரிசு ரூ. 20,000/- ,

மூன்றாம்‌ பரிசு ரூ. 10,000/-

* கட்டுரை வந்து சேர வேண்டிய இறுதி நாள்‌: 05.02.2025

*  எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ போட்டிகள்‌ தொடர்பாகச்‌ செம்மொழித்‌ தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு நேரில்‌ வரவோ, தொலைபேசி வழியாகத்‌ தொடர்புகொள்ளவோ கூடாது.

* கட்டுரையினை அஞ்சலில்‌ மட்டுமே அனுப்பிவைக்க வேண்டும்‌.

* கட்டுரைக்கான தரவுகளை https://cict.in/cict2023/kts/ என்னும்‌ வலைப்பதிவில்‌ பார்வையிடலாம்‌.

கட்டுரையினை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:

பதிவாளர்‌, செம்மொழித்‌ தமிழாய்வு மத்திய நிறுவனம்‌,

செம்மொழிச்‌ சாலை, பெரும்பாக்கம்‌, சென்னை – 600 100

கூடுதல் தகவல்களுக்கு: https://cict.in/cict2023/kts/