சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக். 16) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 


அதாவது 16.10.2024 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.


அரசு, பொதுத் துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.


அத்தியாவசிய சேவை அவசியம்


எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள். பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை. மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகரப் போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, இரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும். பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.


வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுரை


நாளை (16.10.2024) மிக அதி கனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.


ஏற்கெனவே இன்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார் என்றும் இன்று மாலைக்குள் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.