10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதிக்குப் பிறகே வெளியாகும் என்று சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ தேதிகள் குறித்து, போலி செய்திகள் வெளிவந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி அன்று தொடங்கின. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 13ம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதியும் முடிவடைந்தன. இந்த ஆண்டு 12.38 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.


மே 12ஆம் தேதி வெளியான 2023 தேர்வு முடிவுகள்


கடந்த ஆண்டைப் பொறுத்தவரையில், 10ஆம் வகுப்புத் தேர்வை 20,16,779 மாணவ- மாணவிகள் எழுதினர். இதில்  93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 2023ஆம் ஆண்டு, 14,50174 மாணவர்கள் எழுதிய் நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் 90.68 ஆக இருந்தது. கடந்த ஆண்டு மே 12ஆம் தேதி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது.  


இந்த நிலையில், சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது (CBSE Board exam result date 2024) என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மே மாதம் முதல் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என்று இணையத்தில் வைரலானது. எனினும் இது போலி என்று சிபிஎஸ்இ அறிவித்தது.






இந்த நிலையில் மாணவர்களின் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதிக்குப் பிறகே வெளியாகும் என்று சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?


மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், cbseresults.nic.inresults.cbse.nic.in மற்றும் cbse.gov.in என்ற இணைப்புகளை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளையும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களையும் அறிந்துகொள்ளலாம்.


வரும் 2025- 26 கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை சிபிஎஸ்இ தொடங்கி உள்ளது. செமஸ்டர் முறையை அறிமுகம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


கூடுதல் தகவல்களுக்கு: https://cbseresults.nic.in/