வீர கதை 2.0 போட்டிகளில் கலந்துகொள்ளலாம் என்று பள்ளி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ அழைப்பு விடுத்துள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு டெல்லி செல்லவும், தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு பெறவும் முடியும். 


வீர கதை


வீர தீர விருதுகள் பெற்ற வீரர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் தீரத்தையும் உலகறியச் செய்யவும் மாணவர்கள் மத்தியில் பரப்பவும் வீர கதை என்னும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதன்மூலம் ஆண்டுக்கு இரு முறை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் வழங்கப்படும் விருதுகள் பற்றியும் விருதாளர்களின் வீரச் செயல்கள் குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். 


வீர கதை 1.0 ஆகஸ்ட் 2021 முதல் ஜனவரி 2022 வரை நடைபெற்றது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி  வீர கதை 1.0 திட்டத்தின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 




இந்நிலையில் வீர கதை 2.0 போட்டிகளில் கலந்துகொள்ளலாம் என்று பள்ளி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ அழைப்பு விடுத்துள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு டெல்லி செல்லவும், தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு பெறவும் முடியும்.  இதில் மாணவர்கள் கட்டுரை, கவிதை, ஓவியம், வரைபடம் ஆகிய படைப்புகளை மேற்கொள்ளலாம். 


6 முதல் 10ஆம் வகுப்பு வரை ஒரே தலைப்புதான் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், கதை, கவிதை, கட்டுரைகளை 300 வார்த்தைகளில் எழுத வேண்டும். அதேபோல ஓவியம், வரைபடம், வீடியோ வடிவிலும் தங்களின் படைப்புகளை அனுப்பலாம். 


9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், கதை, கவிதை, கட்டுரைகளை 750 வார்த்தைகளில் எழுத வேண்டும். அதேபோல ஓவியம், வரைபடம், வீடியோ வடிவிலும் தங்களின் படைப்புகளை அனுப்பலாம். 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தங்களின் படைப்புகளை உருவாக்க 1000 வார்த்தைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


பங்கேற்பது எப்படி?


மாணவர்கள் cbse.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். 


அதில் latest @cbse என்ற தெரிவைத் தேர்ந்தெடுக்கவும். 


அந்தப் பக்கத்தில் Project Veer Gatha Edition-2 என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


click here to apply என்ற தெரிவை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம்.



 


முன்னதாக பாதுகாப்பு அமைச்சகம், பள்ளி மாணவர்கள் மத்தியில் தீர விருதுகள் பெற்ற விருதாளர்கள் குறித்த விழிப்புணர்வை செயல்திட்டங்கள் வழியாக ஏற்படுத்தும் யோசனையை முன்வைத்தது. அதைத் தொடர்ந்து மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம், மத்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை இணைந்து, வீர கதை 1.0 திட்டத்தை ஆரம்பித்தது. 


நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளி மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். 


ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 4 சிறந்த படைப்புகளை சிபிஎஸ்இ தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் இருந்து 25 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும், அவர்களுக்குத் தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு அளிக்கப்படும். அவர்கள் சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு டெல்லி அழைத்துச் செல்லப்படுவர். சிபிஎஸ்இ தளத்தில் பதிவு செய்யப்பட்ட படைப்புகள் அனைத்துக்கும் மின்னணு சான்றிதழ் வழங்கப்படும்.