மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் சிஏபிஎஃப் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 2024 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, சி.ஏ.பி.எப்-ன் கீழ் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளும் இனி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்.


ஜூன் மாதம் நடைபெறும் சிஆர்பிஎஃப் தேர்வு


ஜூன் மாதம் நடைபெற உள்ள சிஆர்பிஎஃப் தேர்வில் மொத்தமுள்ள 9.212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.


ஆண்டாண்டு காலமாக இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. இதனால் தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். 


முதல்வர் ஸ்டாலின் கடிதம் 


அந்தக் கடிதத்தில், விருப்புவெறுப்பின்றி இந்த அறிவிக்கையை நோக்குகையில், இது தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போருக்கு எதிரான பாகுபாட்டுடனும், அவர்கள் நாட்டின் துணைராணுவப் படையில் பணியாற்றும் வாய்ப்பைப் பறிக்கும் நோக்குடனும் அமைக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே கணினித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பானது இத்தேர்வை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைப் பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது.


நமது அரசமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கும்போதிலும், மேற்கூறிய ஆட்சேர்க்கைக்கான கணினித் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


எனவே, தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சி.ஆர்.பி.எப்-இல் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இக்கணினித் தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களைச் செய்ய மத்தியப் பின்னிருப்புக் காவல்படை அதிகாரிகளை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் சிஏபிஎஃப் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 2024 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்புரி ஆகிய மாநில மொழிகளில் தேர்வு நடைபெறுவதால், அனைத்து இளைஞர்களின் தங்களின் தாய் மொழியிலேயே தேர்வு எழுத முடியும். இதன்மூலம் லட்சக்கணக்கான உள்ளூர் இளைஞர்கள் பயன்பெறுவர். இதுகுறித்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் உரிய வழிகாட்டல்களை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இதற்காக மத்திய உள்துறை அமைச்சகமும் அரசுப் பணியாளர் தேர்வாணையமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.