இந்த ஆண்டு பி.எட். மாணவர்கள் சேர்க்கை இணையவழியில் நடத்த அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது என்றும் மாணாக்கர்கள் இணைய வழியிலேயே விரும்பும் கல்லூரியினை தேர்வு செய்யலாம் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
2025- 26ஆம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும்கல்வியியல் கல்லூரி (பி.எட்) மாணாக்கர் சேர்க்கை விருப்பப் பாடங்கள் மற்றும் கல்லூரிக்கான இணைய வழியில் மாணாக்கர் தேர்வு செய்யலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் பி.எட். மாணாக்கர் சேர்க்கை நேரடி கலந்தாய்வின் மூலம் நடைபெற்று வந்தது. இதனால் வெளி ஊர்களில் இருந்து மாணாக்கர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் சென்னைக்கு வந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளும் நிலை நேரிட்டது. இந்த சிரமங்களைப் போக்க முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு பி.எட். மாணாக்கர் சேர்க்கை இணைய வழியில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
ஜூலை 31-ல் தரவரிசைப் பட்டியல்
அதன்படி, விண்ணப்பங்கள் 20.06.2025 முதல் 21.07.2025 வரை இணைய வழியில் பெறப்பட்டன. 557 ஆண்கள் 2983 பெண்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3545 நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பின்னர் 31.07.2025 அன்று தரவரிசைப் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 900 இடங்களும், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1140 இடங்கள் என 21 கல்வியியல் கல்லூரிகளில் 2040 இடங்கள் உள்ளன. இணைய வழியில் 04.08.2025 பிற்பகல் 1.00 மணி முதல் 09.08.2025 மாலை 5.00 வரை மாணாக்கர்கள் தங்கள் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?
தங்கள் உள்நுழைவு ID மூலம் https://lwiase.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம்.
இணைய வழிக் கலந்தாய்வு குறித்த முக்கிய விவரங்களை https://lwiase.ac.in/schedule1.pdf என்ற இணைப்பில் காணலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://lwiase.ac.in/
இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.