பி.சி. எம்.பி.சி., டி.என்.சி. மாணவர்கள் கல்வி மேற்படிப்பு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க மார்ச் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல மாணவ / மாணவியர்களிடம் இருந்து 2024-2025 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேற்படிப்பு (PM YASASVI Postmatric Scholarship For OBC's, EBC's & DNT's Students) கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குறிப்பாக, https://umis.tn.gov.in (Integration with USS Portal) என்ற இணையதளத்தில் 28.02.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
மார்ச் 15 வரை நீட்டிப்பு
மாணவ / மாணவியர்களின் நலன் கருதியும், கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள ஒரு மாணவர் கூட விடுபடக் கூடாது என்ற நோக்கத்தோடும் 2024- 2025ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் 15.03.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.
அனைத்து கல்வி நிலைய முதல்வர்களும், கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட விபரத்தினை மாணாக்கர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பியுங்கள்
மேலும், நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள், அனைத்து மாணாக்கர்களும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
* மாணவர்கள் https://umisdashboard.tnega.org/auth/login என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில், முதல் முறையாக லாகின் செய்பவர்கள், எமிஸ் எண்ணை வைத்து உள்ளே நுழைய வேண்டும்.
* பிறர் தங்களின் யூசர் ஐடி, கடவுச் சொல், கேப்ட்ச்சா ஆகியவற்றை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டியது முக்கியம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://umis.tn.gov.in