2023-24 ஆண்டிற்கான அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்‌ நாளை (21.11.2023) தொடங்குகின்றன. இந்த விழாக்கள் 22.11.2023, 23.11.2023 மற்றும்‌ 24.11.2023 ஆகிய நாட்களில்‌ நடைபெறுகின்றன.


தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனைக் கண்டறிந்து, வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். 


நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை பட்டிமன்றம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 


போட்டிகள் மும்முரம்


முதற்கட்டமாக பள்ளி அளவில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் நடந்தன. இதில் வட்டார அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. 


மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. அத்துடன் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்பட உள்ளன.


மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.


அரசுப் பள்ளிகளுக்கு இடையே மாநில அளவில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகள்‌ வேலூர், செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளன.


நாளை தொடங்கும் போட்டிகள்


2023-24 ஆண்டிற்கான அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்‌ நாளை (21.11.2023) தொடங்குகின்றன. இந்த விழாக்கள் 22.11.2023, 23.11.2023 மற்றும்‌ 24.11.2023 ஆகிய நாட்களில்‌ நடைபெறுகின்றன. குறிப்பாக 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான போட்டிகள் வேலூர் மாவட்டத்தில் நடைபெறுகின்றன. 9 -10ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டத்திலும் . 11-12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான போட்டிகள் திருச்சி மாவட்டத்திலும் நடைபெற உள்ளன.


ரூ.89.9 லட்சம் நிதி ஒதுக்கீடு


மாநில அளவிலான இப்போட்‌டிகளை மூன்று மாவட்டங்களிலும் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும்‌ வகையில்‌ ரூ.89,92,000/- (ரூபாய்‌ எண்பத்தொன்பது இலட்சத்து தொண்ணூற்று இரண்டு மட்டும்‌) ஒதுக்கப்பட்டுள்ளது.


மேலும்‌ அனைத்து மாவட்டங்களுக்கும்‌ மேற்காண்‌ மாவட்டங்களுக்கு மாணவர்களை போட்டிகளில்‌ பங்கேற்க அழைத்து செல்ல ஒரு மாவட்டத்திற்கு ரூ. 5 இலட்சம்‌ வீதம்‌ 38 மாவட்டங்களுக்கு ரூ.190 இலட்சம்‌ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைத்திருவிழா போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.