அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக ஷீலா என்பவர் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


அரசுப் பள்ளிகளில் தற்காலிக முறையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கூடாது என்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சங்கத் தலைவர் ஷீலா வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி M.S.ரமேஷ், நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சினை என்றும் ஏன் நிரந்தரப் பணியிடத்தில் அரசுப் பள்ளிகளில்  ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். 


அதைத் தொடர்ந்து தற்காலிக ஆசிரியர் நியமனத்தில்  மகிழ்ச்சி  இல்லை எனவும் இந்தப் போக்கு மாணவர்களுக்கு நல்லது அல்ல என்றும் நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார். 


மேலும் பேசிய அவர், ’’தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கும் முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அரசின் பதிலில் திருப்தி இல்லை. இந்த நியமனம் மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இல்லை. முறையற்ற நியமனத்தால் தகுதியற்ற நபர்கள் பணி நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது’’ என்று கூறிய நீதிபதி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.


இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


பின்னணி என்ன?


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களைத் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளிக் கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


ஜூலை 1ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான ஊதியம் ரூ.7,500-ரூ.12,000 என்ற வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 


8 மாதங்களுக்கு மட்டும் இவர்களைத் தற்காலிகமாக நியமிக்கலாம் எனவும் போட்டி ஏற்பட்டால், டெட் தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையில் பணியில் நியமிக்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.





தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர் பணி


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களைத் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட உள்ளனர் என்று அறிவிப்பு வெளியானது. 


SGT எனப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாயும், BT எனப்படும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 10,000 ரூபாயும், PG முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 12,000  ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


இந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. மாநிலம் முழுவதும் 4,989 இடைநிலை ஆசிரியர்களையும் 5,154 பட்டதாரி ஆசிரியர்களையும் 3,188 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களையும் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். 


எழுந்த எதிர்ப்பலைகள்


எனினும் இதற்குக் கடுமையான எதிர்ப்பலைகள் எழுந்தன. ஆசிரியர் பணியில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை முழு நேரமாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். 


இதற்கிடையே அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நியமனத்துக்கு பள்ளிக் கல்வித்துறை தடை விதித்தது. 


இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.