மாநில நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் ஜூலை 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூலை 24 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதன்படி விருது பெறும் ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் ரூ.2,500 மதிப்பில் வெள்ளிப் பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.


விண்ணப்பிக்க என்ன தகுதி? வழிகாட்டு நெறிமுறைகள்:



  • அனைத்து வகை ஆசிரியர்களும்‌ குறைந்தபட்சம்‌ 5 வருடங்கள்‌ பணிபுரிந்திருக்க வேண்டும்‌.

  • மாநில பாடத்திட்டத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ அரசுப்‌ பள்ளிகள்‌ / ஆதிதிராவிட / பழங்குடியினர்‌ நலத்துறை / பிற்பட்டோர்‌ நலத்துறை / சமூக பாதுகாப்புத்‌ துறை / நிதி உதவி பெறும்‌ பள்ளிகள்‌ / ஆங்கிலோ இந்திய பள்ளிகள்‌ மற்றும்‌ சுயநிதி மெட்ரிக் பள்ளிகள்‌ ஆகிய மேலாண்மைகளின்‌ கீழ்‌ செயல்படும்‌ தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ அனைத்துவகை ஆசிரியர்களும்‌ விருதிற்குத்‌ தகுதியுடையவர்கள்‌ ஆவார்கள்‌.

  • இவ்விருது வகுப்பறையில்‌ ஆசிரியர்களுக்கு மட்டுமே கற்பித்தல்‌ ஈடுபடும்‌ வழங்கப்படும்‌. அலுவலகங்களில்‌ பணியில்‌ நிர்வாகப்பணி மேற்கொள்ளும்‌ ஆசிரியர்கள்‌ விண்ணப்பிக்ககூடாது. 

  • கல்வியாண்டில்‌ செப்டம்பர்‌ 30ஆம்‌ தேதிக்கு முன்‌ வயது முதிர்வின்‌ காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களைப்‌ பரிந்துரை செய்யக்கூடாது. ஆசிரியர்கள்‌ கல்வியாண்டில்‌ குறைந்தது 4 மாதங்கள்‌ (செப்டம்பர்‌ 30ஆம்‌ தேதிவரை - Regular Service) பணிபுரிந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌. (மறுநியமன காலத்தைக்‌ கணக்கில்‌ எடுத்துக்‌கொள்ளக் கூடாது).

  • பரிந்துரைக்கப்படும்‌ ஆசிரியர்கள்‌ எவ்விதக்‌ குற்றச்சாட்டிற்கும்‌, ஒழுங்கு நடவடிக்கைக்கும்‌ உட்படாதவராகவும்‌, பொது வாழ்வில் தூய்மையானவராகவும்‌, பொது சேவைகளில்‌ நாட்டம்‌ கொண்டவராகவும்‌, பள்ளி மாணவர்களின்‌ இடைநிற்றலைக்‌ குறைத்தல்‌, பள்ளி மாணவர்‌ சேர்க்கை, தேர்வில்‌ தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல்‌, கல்வித் தரத்தில்‌ பின்தங்கிய மாணவர்களின்‌ தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

  • அரசியலில்‌ பங்கு பெற்று அரசியல்‌ கட்சிகளுடன்‌ தொடர்புடைய ஆசிரியர்களின்‌ பெயர்கள்‌ கண்டிப்பாகப்‌ பரிந்துரைக்கப்படக்‌ கூடாது.

  • கல்வியினை வணிகரீதியாகக்‌ கருதி செயல்படும்‌ ஆசிரியர்களையும்‌, நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும்‌ ஆசிரியர்களையும்‌ இவ்விருதிற்குத்‌ தகுதியற்றவர்களாகக்‌ கருத வேண்டும்‌.

  • சிறந்த முறையில்‌ பணிபுரியும்‌ தமிழாசிரியர்கள்‌ மற்றும்‌ சிறப்பு ஆசிரியர்களான ஓவிய ஆசிரியர்கள்‌, உடற்கல்வி ஆசிரியர்கள்‌, கைத்தொழில்‌ ஆசிரியர்கள்‌, இசை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறன்‌ ஆசிரியர்களில்‌ தகுதியானவர்களையும்‌ விருதிற்குப்‌ பரிந்துரைக்கும்‌போது கவனத்தில்‌ கொள்ளவேண்டும்‌.

  • பரிந்துரைக்கப்படும்‌ ஆசிரியர்களின்‌ கருத்துருக்கள்‌, பெயர்பட்டியலினை மாவட்டத்‌ தேர்வுக்குழுத்‌ தலைவர்‌ தமது சொந்தப்‌ பொறுப்பில்‌ வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. தேர்வுக்குழு உறுப்பினர்களும்‌ இது தொடர்பாக ரகசியம் காத்திடல்‌ வேண்டும்‌.

  • டாக்டர்‌ இராதாகிருஷ்ணன்‌ விருதிற்காக வரையரை செய்யப்பட்ட படிவத்தில்‌ மட்டுமே ஆசிரியர்களின்‌ இணையவழியாக எமிஸ் தளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்திடல்‌ வேண்டும்‌.

  • வருவாய்‌ மாவட்டத்தில்‌ உள்ள ஆசிரியர்களைத்‌ தேர்வு செய்து பரிந்துரை செய்யப்படும்‌பொழுது, அனைத்து வகை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அனைத்துப்‌ பள்ளிகளையும்‌ உள்ளடக்கியதாக உள்ளதைக்‌ கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌. 

  • மாநில அரசால்‌ பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற எந்த ஆசிரியரையும்‌ பரிந்துரை செய்தல்‌ கூடாது.

  • தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாதிரி விண்ணப்பப்‌ படிவத்தினை அடிப்படையாக கொண்டு எமிஸ்  இணைய தளம்‌ மூலம்‌ ஆசிரியர்களின்‌ விவரங்கள்‌ பதிவேற்றம்‌ செய்திட புதிய மென்பொருள்‌ உருவாக்கப்பட்டுள்ளது.


எனவே, மாநில நல்லாசிரியர்‌ விருதுக்கு விண்ணப்பிக்கும்‌ ஆசிரியர்கள்‌ தங்களின்‌ விவரங்களை எமிஸ் இணைய தளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம். ஆசிரியர்கள் விண்ணப்பிக்க ஜூலை 24 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.