அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளிலும் 10 ஆண்டுக்கும் மேலாக தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணியாற்றிய கூண்டோடு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Continues below advertisement

இதைத் தொடர்ந்து பிப்ரவரி 2ஆம் தேதி முதல் அவர்கள் காலவரையறை இல்லாத தொடர் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 16 கல்லூரி வளாகங்களில் இந்த போராட்டம் நடந்து வரும் நிலையில், இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் திருச்சி வளாகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக உதவிப் பேராசிரியர் சரவணக் குமார் ஏபிபி நாடுவிடம் பேசினார். 

எங்களை நியமிக்க மறுப்பது ஏன்?

’’அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 500-க்கும் மேற்பட்ட நிரந்தரப் பேராசிரியர்கள் இருக்கிறார்கள். புதிதாக 190 பேர் வேலையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இவை மொத்தமும் 700-ஐயே தாண்டாத நிலையில், 900-க்கும் அதிகமான பணியிடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி பெற்று இருக்கிறது. ஆனால் எங்களை நியமிக்க மறுக்கிறார்கள்.

Continues below advertisement

2013ஆம் ஆண்டு நான் பணிக்குச் சேர்ந்தேன். கணினி துறையில் பணிபுரிந்து வருகிறேன். நாங்களும் அண்ணா பல்கலை. உதவிப் பேராசிரியர் தேர்வை எழுதினோம். நேர்காணலில் 5 மதிப்பெண்கள் எங்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்கள். இதுதவிர பணி அனுபவம், பிஎச்.டி. படிப்பு ஆகியவற்றுக்கும் தனி மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சதி நடந்திருக்கிறதா?

குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 17 ஆண்டுகள் வரை எங்களுக்கு பணி அனுபவம் இருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதில் ஏதேனும் சதி நடந்திருக்கிறதோ என்று எங்களுக்கு தோன்றுகிறது.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். சிவில் துறையில் தேர்வு செய்யப்பட்ட மூவர் ஏற்கெனவே உதவி பொறியாளராகப் பணியாற்றியவர்கள். அவர்கள் இன்ஃப்ளூயன்ஸ் செய்து பணிக்கு வந்திருப்பார்கள் என்று அஞ்சுகிறோம்.

மாற்றுத் திறனாளி பேராசிரியருக்கு நடந்தது என்ன?

இதேபோலத்தான் தற்காலிக உதவிப் பேராசிரியராக பார்வைச் சவால் கொண்ட என் நண்பர் இருந்தார். எழுத்துத் தேர்வுகளுக்குப் பிறகு அவருக்கு மாற்றுத் திறனாளி இட ஒதுக்கீட்டின்கீழ் நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 5 பேருக்கு 1 நபர் என்ற விகிதத்தில் நேர்காணலுக்குத் தேர்வர்கள் அழைக்கப்பட்ட நிலையில், அவருடன் மாற்றுத்திறனாளிகள் யாரும் நேர்காணலில் கலந்துகொள்ளவில்லை.

இதனால், அந்த வேலை நமக்குத்தான் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்தார். எனினும் தேர்வு பட்டியலில் அவரின் பெயர் இல்லை. வேலையை வேறு நபருக்கு அளித்தார்கள். இதுதொடர்பாக நண்பர்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக அந்த நபரின் நியமனத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இதுதாண்டியும் ஏராளமான நபர்கள் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணிக்குச் சேர்ந்து சிண்டிகேட் மூலமாக நிரந்தரம் செய்யப்பட்ட பேராசிரியர்கள்தான் அதிகம். அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளரே அப்படி வந்தவர்தான்.

கல்லூரிகளுக்கு இடையில் பேதம் ஏன்?

சென்னையில் உள்ள அண்ணா பல்கலை.யும் வளாகக் கல்லூரிகளும் ராஜா போலவும் நாங்கள் (பிற நகரங்களில் உள்ள உறுப்புக் கல்லூரிகள்) சிப்பாய் போலவும் இருக்கிறோம். அங்குதான் அனைத்து சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

எதாவது நல்லது நடக்கும் என்று நம்பித்தான் தொடர்ந்து குறைந்த சம்பளத்தில் வேலையில் இருந்தோம். குருட்டு நம்பிக்கையில் அவ்வாறு இருக்கவில்லை. கடந்த கால வரலாற்றை வைத்துத்தான் இருந்தோம். 2006-ல் பணியில் சேர்ந்தவர்கள் 2009ஆம் ஆண்டும் 2009-ல் சேர்ந்தவர்கள் 2011ஆம் ஆண்டும் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள்.

இளமைக் காலத்தை இழந்துவிட்டோம்

அதனால்தான் குடும்பம், குழந்தைகளுடன் 27 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். என்னுடைய 13 ஆண்டு இளமைக் காலம் முழுவதையும் அண்ணா பல்கலைக்கழகத்துக்காக செலவிட்டிருக்கிறேன். இப்போது 42 வயதாகிறது. இனி எங்கே போய் என்ன பணியாற்றுவேன்?

அரசே பொய் சொல்வதா?

ஜனவரியில் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை ஆய்வு செய்யும் என்பிஏ குழு (NBA- National Board of Accreditation) வந்திருந்தது. அப்போது கணக்கு காண்பிப்பதற்காக எங்களை வைத்திருந்து, அனுப்பிவிட்டார்கள். அரசே பொய் சொல்கிறது. ஏஐசிடிஇ விதிகளின்படி எங்களை உதவிப் பேராசிரியர்கள் என்றுதான் பெயரிட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படியில்லை. இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்று சரவணக்குமார் வேதனையுடன் தெரிவித்தார்.

ஜனவரி 31ஆம் தேதி அன்று வேலையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளாக மேலாகப் பணியாற்றி வரும் எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதே இவர்களின் தலையாய கோரிக்கையாக இருக்கிறது.