அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர் / டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.


தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக் கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக் கழகம். பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக் கழகங்களில் அண்ணா பல்கலைக் கழகம். இந்தப் பல்கலைக் கழகத்திற்கு கீழ் வரும் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளை படித்து வருகின்றனர். 


அண்ணா பல்கலைக்கழகத்துடன், கீழ்க்காணும் 4 புகழ்பெற்ற வளாகக் கல்லூரிகள் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன.


* சிஇஜி கல்லூரி (CEG) (1794-ல் நிறுவப்பட்ட கல்லூரி)


* அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி (ACT) (1944-ல் நிறுவப்பட்ட கல்லூரி)


* எம்ஐடி கல்லூரி (MIT) (1949-ல் நிறுவப்பட்ட கல்லூரி)


* கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி (SAP) (1957-ல் நிறுவப்பட்ட கல்லூரி)


ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் 


முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் கற்பிக்கப்பட்டு வரும் பி.இ./ பி/டெக். உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கும் எம்.இ./ எம்.டெக். ஆகிய முதுநிலை படிப்புகளுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. மிக்ஜாம் புயலால் இந்தத் தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டன.


குறிப்பாக டிசம்பர் 4 முதல் 7ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 11 முதல் பிப்ரவரி 17 வரை நீட்டிக்கப்பட்டு, நடைபெற்றன. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.


தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி? (Anna University Results: Steps To Check)


* தேர்வர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லவும். அதாவது, https://coe1.annauniv.edu/home/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


* தேர்வு முடிவுகள் பக்கத்துக்குச் செல்லவும்.


* எந்தப் படிப்போ, அந்த படிப்பு தேர்வு முடிவுகளுக்கான இணைப்பை க்ளிக் செய்யவும்.


* அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளை சரியான தகவல்களை உள்ளிட்டுப் பூர்த்தி செய்யவும்.


* தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.


* தகவல்களை சரிபார்த்து, வருங்காலப் பயன்பாட்டுக்காகப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.


மாணவர்கள் தங்களின் விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து காண ஏப்ரல் 29 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் விவரங்களுக்கு: https://coe1.annauniv.edu/aucoe/pdf/2023_nd/Photocopy_Procedure_nd23.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


பாடத்திட்ட மாற்றம்


20 ஆண்டுக்குப் பிறகு பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்ட மாற்றம் 2022- 23ஆம் கல்வி ஆண்டில் அமலானது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.


ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற திறன்களை அவர்கள் கொண்டிருக்காததுதான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழில் துறையினரின் தேவைக்கும் மாணவர்களின் திறனுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் புதிய பொறியியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, பாடத்திட்டம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கூடுதல் தகவல்களுக்கு: https://coe1.annauniv.edu