ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பணிச்சான்று வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று டிட்டோஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு வலியுறுத்தி உள்ளது.
பணி புரியும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசுக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் டிட்டோஜாக் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது பணி சான்று வழங்க வேண்டி உள்ளது.
ஏராளமான ஆவணங்கள் சமர்ப்பிப்பு
இந்த பணிச்சான்றை பெறுவதற்கு கல்வி சான்றுகளின் உண்மைத் தன்மை சான்றுகள் மற்றும் பணிப் பதிவேடு நகல் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை சமர்ப்பித்து மாவட்டத் தொடக்கக் அலுவலரிடம் பெற வேண்டி உள்ளது. சில மாவட்டங்களில் தணிக்கைத் தடை சான்றுகளையும் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் கேட்கப்படும் ஆவணங்கள் அனைத்தும் வட்டார கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் எல்லாம் ஏற்கனவே வழங்கப்பட்டு பணிபுரிந்து வரும் நிலையில் மீண்டும் அவைகளை எல்லாம் மீண்டும் நகலெடுத்து வழங்க வேண்டியதில்லை என டிட்டோஜாக் கருதுகிறது.
குழப்பங்களை தவிர்க்கும் வகையில்..
எனவே பணி புரியும் ஆசிரியர்கள் தங்களது பணிச் சான்று கேட்டு வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விண்ணப்பித்தால் மட்டுமே போதுமானது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழியாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வலைதளத்தில் உள்ள ஆவணங்களை சரிபார்த்து பணிச் சான்று வழங்க வேண்டும்.
அப்படி வழங்குகின்றபோது ஆசிரியர்களுக்கு தேவையற்ற அலைச்சலையும், பணிச்சுமையையும் ஏற்படுத்தாது. இந்த குழப்பங்களை தவிர்க்கும் வகையில் எமிஸ் வலைதளத்தில் பணி மாறுதலுக்கு விண்ணப்பிப்பது போல் பணிச் சான்றுக்கும் விண்ணப்பித்து ஆணைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
எனவே பள்ளிக் கல்வி இயக்குநரை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று டிட்டோஜாக் தெரிவித்துள்ளது.