அரசுப் பள்ளிகளில் ஜூன் 13ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. 


கொரோனா தொற்றால் தள்ளிப்போன திறப்பு


தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. 


இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வு இந்த மாத இறுதியில் முடிவடைகிறது.


மே 14 முதல் கோடை விடுமுறை


மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.


ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு


இதற்கிடையே 1-10ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 13ஆம் தேதியும், பதினொன்றாம் வகுப்பிற்கு ஜூன் 27ஆம் தேதியும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கொரோனா கால அட்டவணையைப் போல அல்லாமல், வழக்கமான கல்வி ஆண்டாக இந்த ஆண்டு செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் தெரிவித்தார். அத்துடன் 2022-23ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையையும் வெளியிட்டார்.


அரசுப் பள்ளிகளுக்கு 3.35 கோடி புத்தகங்கள்


இந்த சூழலில் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட உடன், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க, 3,35,63,000 புத்தகங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு 1,83,85,000 புத்தகங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தத்தில், 5.19 கோடி (5,19,48,000) புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 




ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை


இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் ஜூன் 13ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பள்ளிகள் திறப்புக்கு முன்னரே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்துவிடும். இந்த முறை இன்னும் மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை.


பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், அரசுப் பள்ளிகளில் மிகத் தாமதமாகத் தொடங்குகிறது. அதாவது, பள்ளிகள் திறக்கப்படும் நாளில் (ஜூன் 13-ம் தேதி) சேர்க்கை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.