அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் மே மாதம் ஊதியம் இல்லாத நிலையில், ஜுன் மாத ஊதியமும் வழங்கப்படாமல் இருந்தது குறித்து ஏபிபிநாடு செய்தி தளத்தில் செய்தி வெளியானதை தொடர்ந்து உடனடியாக ஆசிரியரிகளின் சம்பளத்தை அவர்களது வங்கி கணக்கில் அதிகாரிகள் செலுத்தியுள்ளனர். 


பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 


தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும் இதற்காக இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 


ஊதியம் இல்லாத மே மாதம் 


கடந்த பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்து இவர்களுக்கு 7500 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது 12,500 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகின்றனர். பகுதி நேர பணியாக இருந்த போதிலும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 12 ஆண்டுகள் முடிந்த பின்னும்கூட இன்றுவரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு மறுத்து வருவது மிகுந்த வேதனைக்குரியது.


அதுமட்டுமின்றி மாநில அரசு வழங்கிய ஊதிய உயர்வை அலுவலகப் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு, ஆசிரியர்களுக்கு வழங்க மறுக்கும் தமிழ்நாடு அரசின் செயல் பெருங்கொடுமையாகும்.மேலும் இவர்களுக்கு மட்டும் ஆண்டுகளுக்கு 11 மாதம் தான் என்பது போல ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விடுமுறை காலத்தில் அந்த குறைந்த ஊதியமும் வழங்கப்படுவது இல்லை.


தாமதம் ஆகும் ஊதிய உயர்வு 


இந்நிலையில் கடந்த ஆண்டு 2023 ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூபாய் 10 ஆயிரம் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் பணிநிரந்தரம் செய்வதாக தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை அடுத்து பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி அறவழியில் போராடி வந்தனர். இதனை அடுத்து நடப்பு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரூபாய் 2500 சம்பளம் உயர்த்தி வழங்க ஆணை வெளியிடப்பட்டது.


ஆனாலும் 10 ஆயிரம் ரூபாய் SNA கணக்கிலும், 2500 ரூபாய் ECS முறையிலும் தனித்தனி பரிவர்த்தனையாகவே பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. மொத்தமாக இந்த 12500 ரூபாய் சம்பளத்தை ஒரே பரிவர்த்தனையில் இதுவரை பட்டுவாடா செய்யப்படாததால் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மதங்களின் சம்பளம் தாமதமாகவே வழங்கப்பட்டது. இதனால் 12,500 ரூபாய் சம்பளத்தை ஒரே பரிவர்த்தனையாக வழங்க வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை வைத்து வருகின்றனர்.


இந்த நிலையில் கடந்த மே மாதம் சம்பளமாக இல்லாத நிலையில் ஜுன் மாத ஊதியமும் வழங்கப்படாமல் இருந்து வந்தது. குறிப்பாக தமிழகத்தில் மயிலாடுதுறை, வேலூர், சேலம், ராணிப்பேட்டை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் இதுவரை ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூறுகையில் வீட்டு வாடகை , மின்சாரம் கட்டணம், உணவு, மருத்துவ செலவு உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கு இந்த குறைந்த ஊதியத்தையை நம்பியுள்ள பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுத்து உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


இதுகுறித்து ஏபிபிநாடு செய்தி தளத்தில் ஜுலை 4 -ம்தேதி செய்தி வெளியானது, அதனை தொடர்ந்து அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதை அடுத்து மறுதினமே பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஊதியம் அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.