தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் மே மாதம் 24ஆம் தேதி தொடங்க உள்ளன. இந்தக் கலந்தாய்வு ஜூன் மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எமிஸ் இணையதளம் மூலமாக இந்தக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.


மே 13 முதல் விண்ணப்பப் பதிவேற்றம்


இதற்கிடையே பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள் எமிஸ் எனப்படும் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) வாயிலாக மே 13 முதல் பதிவேற்றம் செய்யத் தொடங்கினர். 63 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க இன்று (மே 17) கடைசித் தேதி என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார். 


யார், யாரெல்லாம் விண்ணப்பித்தனர்?


இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு 26,075 பேர் விண்ணப்பித்துள்ளனர். இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் மாறுதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்களுக்கு 37,358 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆக மொத்தத்தில் 63,433 ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.


இந்த நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மே 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  


இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தற்போது 2024-25ம்‌ கல்வியாண்டில்‌ நடைபெறவுள்ள பொதுமாறுதல்‌ கலந்தாய்விற்கு, முன்‌ எப்பொழுதும்‌ இல்லாத அளவிற்கு
ஆர்வத்துடன்‌ ஆசிரியர்கள்‌ விண்ணப்பித்து வருகின்றனர்‌. அதே போல்‌ மாவட்டம்‌ விட்டு மாவட்டம்‌ செல்வதற்காக தொடக்கப்‌ பள்ளி தலைமையாசிரியர்கள்‌, நடுநிலைப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌
இடைநிலை ஆசிரியர்கள்‌ அதிக அளவில்‌ விண்ணப்பித்துள்ளதைக் காண முடிகிறது. இடையில்‌ ஆசிரியர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ போது கல்வி தகவல்‌ மேலாண்மை முகமை இணையதளத்தில்‌ தொழில்நுட்பக்‌ கோளாறும்‌ ஏற்பட்‌ டிருந்தது.


பல்வேறு ஆசிரியர்கள்‌ சங்கங்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களிடமிருந்து மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால
அவகாசத்தை நீட்டிக்குமாறு வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, பொதுமாறுதல்‌ கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும்‌ காலஅளவை கூடுதலாக 7 நாட்களுக்கு நீட்டித்து 25.05.2024 வரை விண்ணப்பிக்கலாம்‌.


அதேபோல கலந்தாய்வில் கலந்துகொள்ள ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.