ஆசிரியர்கள் உள்ளிட்ட தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப் படி, ஜூலை 1ஆம் தேதியில் இருந்து 4% உயர்த்தி 46 சதவீதமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும்‌ 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல்‌ 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்‌ என தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ ‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றம்


இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’மக்கள்‌ நலனுக்காக அரசு வகுக்கும்‌ பல்வேறு திட்டங்களைச்‌ செயல்படுத்தும்‌ அரும்பணியில்‌, அரசோடு இணைந்து பணியாற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு விட்டுச்‌ சென்ற கடும்‌ நிதி நெருக்கடி மற்றும்‌ கடன்‌ சுமைக்கு இடையேயும்‌, அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ பல்வேறு கோரிக்கைகள்‌ குறித்த வாக்குறுதிகளைப்‌ படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன்‌ இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.


அவ்வகையில்‌, அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ தொடர்ந்து வலியுறுத்தி வரும்‌ கோரிக்கையை முதலமைச்சர்‌ கனிவுடன்‌ பரிசீலித்து, ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்‌ போதெல்லாம்‌ உடனுக்குடன்‌ தமிழ்நாடு அரசும்‌ அதை பின்பற்றும். அவ்வாறு பின்பற்றி அரசு அலுவலர்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கும்‌ அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும்‌ என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத்‌ தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப் படியை 04.07.2023 முதல்‌ 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார்‌. 


ஆண்டுக்கு 2546 கோடி ரூபாய்‌ கூடுதல்‌ செலவு


இந்த அகவிலைப்படி உயர்வால்‌, சுமார்‌ 16 இலட்சம்‌ அரசு அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌ பயன் பெறுவார்கள்‌. இதனால்‌ ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய்‌ கூடுதல்‌ செலவினம்‌ ஏற்படும்‌. எனினும்‌, அரசு அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்கள்‌ நலன்‌ கருதி இதற்கான கூடுதல்‌ நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்‌’’ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு, தன் ஊழியர்களுக்கான அகவிலைப் படியை ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை உயர்த்தி வருகிறது. மத்திய அரசைத் தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப் படியை உயர்த்தி, அறிவிப்பது வழக்கம். இந்த நிலையில் தமிழக அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப் படியை உயர்த்தி அறிவிக்காமல் இருந்தது.


இதுகுறித்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் அதிருப்தி தெரிவித்த நிலையில், ‌42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல்‌ 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்‌ என தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ ‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.