சென்னைப் பல்கலைக்கழக ஊழியர்கள் 3 பேர், முறையான பதிவு உயர்வு வழங்க கோரி, பல்கலைக்கழக வாயிலில் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் இணைப்புக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு மாற்றுப் பாலினத்தவருக்கு இடம் வழங்கப்படும் என்றும் இதன்மூலம் ஏராளமான மாற்றுப் பாலினத்தவர்களின் உயர் கல்வி உறுதி செய்யப்படும் என்றும் கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது.


80-க்கும் அதிகமான துறைகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் நிலையில், துணை வேந்தரை நியமிப்பதில் தாமதம் நிலவி வருகிறது. மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதம் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 


இதனால், ஆசிரியர்களின் ஊதியம், பதவி உயர்வு, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்குவதில் சிக்கல் நிலவுகிறது. அதேபோல பட்டமளிப்பு விழாவும் தாமதமான நிலையில், செப்டம்பர் 4ஆவது வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம்


இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழக ஊழியர்கள் 3 பேர், முறையான பதிவு உயர்வு வழங்க கோரி, பல்கலைக்கழக வாயிலில் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அலுவலர் விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


’’சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் அலுவலர்களாக பணியாற்றி வரும் எங்களுக்கு, முறைப்படி பதவி உயர்வு வழங்கவில்லை. தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தால் உதவி பதிவாளர் ஆகியிருப்போம். ஆனால் திட்டமிட்டு சில அதிகாரிகள் உள்ளடி வேலை பார்த்து எங்களுக்கு பதவி உயர்வு கொடுக்க மறுத்து வருகின்றனர்.


பலமுறை மனுக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை


இது தொடர்பாக பலமுறை மனு எழுதிக் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து சென்னை பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகில் மூன்று பேரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.


இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்களை அழைத்து பேசி ஆவன செய்ய வேண்டும்’’.


இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.