விழுப்புரம்: விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வினை முன்னிட்டு ஆட்சியர் பழனி தேர்வு மையங்களில் இன்று ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் 25627 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
 

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகின்ற 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 125 தேர்வு மையங்களில் பத்தாம் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை, 364 பள்ளிகளை சேர்ந்த 13,006 மாணவர்களும், 12,621 மாணவிகளும் என மொத்தம் 25,627 மாணவ- மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்த தேர்வு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

 

தேர்வின் போது மாணவர்கள் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாத வண்ணம் இருக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் 176பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தடையற்ற மின்சார வசதிகள் குடிநீர் வசதிகள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பழனி முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா திருவிக வீதியிலுள்ள அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.