விழுப்புரம்: தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.


இந்த தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21ஆயிரத்து 57 பேர் எழுதவுள்ளனர். 3ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு நாளும் 45,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க 4ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வுப் பணியில் ஈடுபட உள்ளன. தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் தேர்வறையில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது.


மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் 03.03.2025 முதல் 25.03.2025 வரை நடைபெறவுள்ளது!


இத்தேர்வில் விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் திண்டிவனம் கல்வி மாவட்டம் மற்றும் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் மொத்தம் 105 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன. மேல்நிலை இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் 10665 பேரும் மாணவிகள் 11171 பேரும் ஆக மொத்தம் 21836 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.


மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் 05.03.2025 முதல் 27.03.2025 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வில் விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 22435 மாணவ மாணவிகள் 105 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 28.03.2025 முதல் 15.04.2025 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வில் விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் 24126 மாணவ/ மாணவிகள் 126 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.


03.03.2025 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு/முதலாமாண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்/துறை அலுவலர்கள்/பறக்கும்படை உறுப்பினர்கள்/ வழித்தட அலுவலர்கள் / அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் மொத்தம் 3200 பணியாளர்கள் தேர்விற்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


இத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டில் 579 மாணவ/மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். 20 இதில் பார்வைத்திறனற்ற மாணவ/ மணவிகள் தேர்வெழுதுகின்றனர்.


தேர்வு முறையாக நடைபெறுவதற்கு 147 நிலையான பறக்கும் படையினரும், திடீர் ஆய்வு செய்வதற்கு முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களின் தலைமையில் 10 பறக்கும். படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையாக நடைபெற முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் அலுவலர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ/ மாணவிகள் காப்பி அடிப்பதோ அதற்கு உதவியாக இருப்பதோ கூடாது. காப்பி அடிக்கும் மாணவ/மாணவிகளின் மீது அரசுத்தேர்வுகள் இயக்குநரக விமுறைகளின் படி நடவடிக்கை. எடுக்கப்படும்.


தேர்வு மையங்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் விவரம் :


அனைத்து தேர்வு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகள், தேர்வு நடைபெறும் நாட்களில் தடையற்ற மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு சுகாதாரம் சார்ந்த அவசர உதவிகள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதும் மாணவி ரித்திகாவின் தந்தை பிரபாகரன் இன்று காலை மாரைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் மாணவி தேர்வு எழுத வந்துள்ளார்.


இதேபோல் நூர்ஜகான் என்கிற மாணவியின் தந்தை ஜான்பாட்ஷா நேற்று உயிரிழந்த நிலையில் அந்த மாணவியும் தற்போது தேர்வு எழுதி வருகிறார்.


முகையூர் பகுதியைச் சேர்ந்த மாணவி மகிமை அரசின் தாய் அமலமேரி நேற்று உயிரிழந்த நிலையில் தற்போது அந்த மனைவியும் தேர்வு எழுதி வருகிறார்.