அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வாசிப்பு திறன் ஏப்ரல் மாதத்தில் சோதனை செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 4,554 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு Open Challenge கொடுத்துள்ளனர். அதாவது தங்களின் பள்ளிக்கு வருகை தந்து ஆய்வு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் கூறி உள்ளதாவது:
''தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக வழக்கமான கற்றல் கற்பித்தல் பணிகளுடன் எண்ணும் எழுத்தும், திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் போன்ற திட்டங்கள்மாணவர்களின் வாசிப்புத் திறனையும் கற்றல் திறனையும் மேம்படுத்தி வருகின்றது.
சவாலுக்கு அழைப்பு விடுத்த வளர்மதி
தளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆனேகொள்ளு, ஊராட்சிக்குட்பட்ட டி.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை, வளர்மதி என்பார் சமூக வலைத்தளப் பக்கத்தில் 04.11.2024 அன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு அழைப்பு விடுத்து, அதில் -எங்கள் பள்ளியில் 33 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். அனைவரும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களை நன்றாக வாசிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களில் அடைவு பெற்றுள்ளனர். அமைச்சர் எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
அமைச்சர் பள்ளியில் மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களும் அழைப்பு விடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறினார்.
வெளிப்படையான சவால்
அதனடிப்படையில், தற்போது மேற்கண்ட பொருண்மையின் சார்பில் 4,552 பள்ளிகளின் பெயர்ப் பட்டியல் மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் இருந்து (தொடக்கக் கல்வி) நவம்பர் 2024-ல் பெறப்பட்டுள்ளது. அதனை ஏற்று, பள்ளிக் கல்வித் துறை, அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்த கருத்துருக்களின்படி, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் மன்ற பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோர் முன்னிலையில், தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை 10௦ நாட்களில் கற்பித்து, ஓப்பன் சேலஞ்ச் எனப்படும் வெளிப்படையான சவாலைப் பொது வெளியில் அறிவித்து இச்செயலை நடைமுறைப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலக்கினை நிர்ணயித்தல்
மேற்குறித்த 100 நாட்களுக்குள் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் மற்றும் கணக்கு பாடத்தில் கழித்தல், கூட்டல், பெருக்கல், வகுத்தல் ஆகிய கற்றல் திறன்களில் அடைவு பெறுவதற்கான இலக்கினை நிர்ணயித்தல் சார்ந்து ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலைமை ஆசிரியர்களுக்கான நேரடிக் கூட்டம் நடத்தி, போதுமான அறிவுரைகள், வழிகாட்டுதல்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) வழங்க வேண்டும்.
மேற்கண்ட விவரங்களை சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு தேவையான ஆலோசனைகளை சார்ந்த மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.
மேலும், மேற்கண்ட விவரத்தை ஆய்வு செய்யும் பொருட்டு சார்ந்த வட்டார வள மையப் பயிற்றுநர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
முதற்கட்டமாக 4552 பள்ளிகளில் செயல்படுத்தவும், பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி நடைமுறைப்படுத்தவும், அதனைத் தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும் இந்நிகழ்வை கொண்டு செல்வதற்கு முத்தாய்ப்பாகவும் அமையும். இதன்மூலம் அனைத்து அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க ஒரு ஊக்குவிப்பாக அமையும்''.
இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.