கர்நாடகா மாநிலத்தில் இளம்பெண்ணை 6 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 


கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே நெலமங்களா நகர் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பீதர் பகுதியில் சிவக்குமார் ஒசள்ளி என்ற 25 வயதுமிக்க இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார் . இவர் பெங்களூரு சிக்பேட்டையில் தங்கி அங்குள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு உடுப்பியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு இவர் சென்றுள்ளார். அப்போது சிவகுமாருக்கும், பெங்களூரு புறநகர் மாவட்டமான நெலமங்களாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களுடைய செல்போன் எண்களை பறிமாறிக் கொண்டு பேசவும் தொடங்கியுள்ளனர். 


இப்படியான நிலையில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த இளம்பெண் மட்டும் வீட்டில் இருந்ததை அறிந்த சிவகுமார் அங்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அப்பெண்ணுக்கு தெரியாமல் சிவகுமார் தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை காட்டி அடிக்கடி அந்த பெண்ணை இவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 


ஒரு கட்டத்தில் தன்னுடன் வரவில்லை என்றால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக சொல்லியுள்ளார். இதனால் பயந்துப்போன அப்பெண் யாரிடம் இந்த சம்பவம் பற்றி பேசாமல் இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிவகுமார் கடந்த 6 ஆண்டுகளாக அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு மட்டுமல்லாமல் அவரிடம் இருந்து சிறிது சிறிதாக ரூ.85 ஆயிரம் வரை பறித்துள்ளார். தொடர்ந்து சிவகுமார் அதிகமாக தொல்லை கொடுக்க ஆரம்பித்ததால் விரக்தி அடைந்த அப்பெண் நடந்த உண்மைகளை எல்லாம் தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். 


இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அப்பெண்ணை அழைத்துக் கொண்டு நெலமங்களா டவுன் போலீசில் புகாரளித்தனர். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகுமாரை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ச்சியாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க: Crime: 18+ படம் பார்ப்பியா? ஆத்திரத்தில் மகனுக்கு விஷம் வைத்து கொன்ற தந்தை - மகாராஷ்ராவில் பயங்கரம்!