சென்னையில் ஒருதலைக் காதலால் இளம்பெண் கழுத்தை நெறித்து இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(21). இவர் சென்னை போலீஸ் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தன்னுடன் தங்கியிருந்த மஞ்சுளா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மின்விசிறியில் தொங்கிய நிலையில் இருந்த அவரை நான் கீழே இறக்கி விட்டு பயத்தில் வீட்டை விட்டு வெளியேறி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்து விட்டேன் என கூறியுள்ளார். உடனடியாக இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 


அதன்படி இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் இறந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து மஞ்சுளாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மஞ்சுளா மரணம் தொடர்பாக சந்தோஷிடம் விசாரணை நடத்த முடிவு செய்த நிலையில், தாமாகவே வந்து அவர் ஆஜராகியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. 




தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள சோளக்காடு வெள்ளக்கோவிலைச் சேர்ந்த 23 வயதான மஞ்சுளா பாலிடெக்னிக் வரை படித்து விட்டு அறந்தாங்கியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இதே நிறுவனத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியுள்ள சின்ன அண்ணாநகர் எல்லன்புரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமாரும் பணியாற்றியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் நட்பாக இருந்துள்ளனர். இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சந்தோஷூக்கும், மஞ்சுளாவுக்கு சென்னையில் வெவ்வேறு இடங்களில் பணி கிடைத்துள்ளது. 


அவர்கள் இருவரும் சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் சந்தோஷூக்கு மஞ்சுளா மீது ஒருதலையாக காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் மஞ்சுளாவோ தன்னுடன் பாலிடெக்னிக்கில் படித்து தற்போது பெங்களூருவில் வேலை பார்த்து வரும் அய்யப்பன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால் சந்தோஷ் ஆத்திரமடைந்துள்ளார். 


இதன் காரணமாக சந்தோஷ் - மஞ்சுளா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று , மதுபோதையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ்குமார் மஞ்சுளா போனில் பேசுவதை பார்த்து கோபமடைந்துள்ளார். இதனையடுத்து அவரின் கழுத்தை சந்தோஷ் துப்பாட்டாவால் நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின் தற்கொலை நாடகத்தை நிகழ்த்தி தப்பித்து விடலாம் என நினைத்த சந்தோஷ் போலீஸ் விசாரணையில் மாட்டிக் கொள்வோம் என பயந்து உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். ஒருதலைக் காதலால் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண