கேரளாவில் மருத்துவமனை வளாகத்தில் இளம்பெண் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள முவட்டுபுலா என்ற பகுதியில் சிம்னா ஷகீர் என்ற 35 வயதுமிக்க பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே சிம்னாவின் தந்தை உடல்நலப் பிரச்சினை காரணமாக முவட்டுபுலாவில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். 


அவரை பார்க்க நேற்று மாலை 3 மணியளவில் வீட்டில் இருந்து சிம்னா மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஷாகுல் அலி என்ற இளைஞர்  தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிம்னா ஷகீரின் கழுத்தில் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத சிம்னா இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கொலை செய்த ஷாகுல் அலியும் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அருகிலிருந்தவர்கள் தடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உடனடியான போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து சிம்னா ஷகீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 


இலேசான காயங்களுடன் இருந்த ஷாகுலை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஷாகுல் அலியும், சிம்னா ஷகீரும் முன்பே அறிமுகமாகி இருந்ததும், காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததும் தெரிய வந்தது. சில நாட்களுக்கு முன்பு கூட சிம்னா வேலை செய்த கடையில் சென்று ஷாகுல் அலி பிரச்சினை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முழுமையான விசாரணை முடிந்த பிறகு என்ன காரணம் என்ற உண்மை தெரிய வரும். அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க: பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம்; பெண்ணின் மீது உறவினர்கள் கொலை வெறி தாக்குதல்