ராணிப்பேட்டையில் தாய் மற்றும் மகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கஞ்சா வியாபாரி மனைவியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கஞ்சா வியாபாரி:


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசாபேட்டை அண்ணா நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்ற பகுடு பாஸ்கரன் என்பவர் தனது 2வது மனைவி துர்காவுடன் வசித்து வருகிறார். இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது பெண் தன் மகன் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். அப்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 8 ஆண்டுகளுக்கு முன் ஆற்காட்டில் குடியேறியதோடு, ராணிப்பேட்டையில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். 


அவரது மகள் ஆற்காட்டில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே பாஸ்கர் அடிக்கடி வலிய சென்று பேச்சு கொடுக்கும் நிலையில், அந்த பெண் கண்டுக் கொள்ளாமல் இருந்துள்ளார். இந்த விவகாரம் அறிந்த பாஸ்கர் மனைவி துர்கா, அப்பெண்ணுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கிடையில் கஞ்சா விற்பனை வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்  பாஸ்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தான் வெளியே வந்துள்ளார். 


பாலியல் தொல்லை:


வீட்டுக்கு வந்த அவரிடம் துர்கா, அந்த பெண் அடிக்கடி தகராறு செய்வதாக கூறியுள்ளார். ஏற்கனவே தான் பேச்சு கொடுத்தும் கண்டுக்கொள்ளாமல் இருந்ததால் ஆத்திரத்தில் இருந்த பாஸ்கரன் துர்காவுடன் சேர்ந்து கடந்த 28 ஆம் தேதி இரவு 11 மணிக்கு அப்பெண் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். வெளிப்புறம் துர்கா காவலுக்கு இருக்க, பாஸ்கர் உள்ளே சென்று அப்பெண்ணைகத்தியை காட்டி மிரட்டியதோடு, கட்டிப் போட்டுள்ளார். 


சத்தம் கேட்டு வந்த அவரது மகளை பாஸ்கரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் செல்போனில் மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து கழிவறையில் அடைத்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கட்டிப்போட்ட அப்பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் எனவும் பாஸ்கரன் மிரட்டியுள்ளார். 


இதனால் மன வேதனை அடைந்த அப்பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி துர்கா மீது நேற்று முன்தினம் புகாரளித்தார். இதையடுத்து போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்த்னர்.