கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள வடக்கிபாளையம் வாட்டர் டேங்க் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார். 36 வயதான இவர், பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி (32) தையல் தொழில் செய்து வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் கத்திக் குத்து காயங்களுடன் இருந்த வினோத்குமாரை, மகாலட்சுமி சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு படுகாயத்துடன் உயிருக்கு போராடிய வினோத்குமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


இது குறித்து தகவல் அறிந்த வடக்கிபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மகாலட்சுமியிடம் காவல் துறையினர் விசாரித்தபோது, வினோத்குமார் கத்தரிக்கோலால் தன்னைத் தானே குத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது உடலில் இருந்த படுகாயங்கள் காவல் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் அக்காயங்கள் தற்கொலை செய்ய தன்னை தானே குத்திக்கொண்டது போன்று இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் மகாலட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தனது கணவர் வினோத்குமாரை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்ததை மகாலட்சுமி ஒப்புக் கொண்டார்.


இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், வினோத்குமாருக்கு குடி பழக்கம் இருந்த நிலையில் மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி சரமாரியாக அடித்து உதைத்து வந்ததும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் நேற்று முன் தினம் இரவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த வினோத்குமார் மனைவியை சராமரியாக தாக்கியுள்ளார். அந்த தகராறு நேற்று காலை வரை நீடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகாலட்சுமி வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து வினோத்குமாரை சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார்.


கணவரை கொலை செய்ததால் காவல் துறையினர் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில்,  கத்தரிக்கோலால் வினோத்குமார் தன்னைத்தானே குத்தி தற்கொலை முயன்றதாக கூறி நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து மகாலட்சுமியை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்த கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண