நெல்லை மாவட்டம் பத்தமடை பகுதியை சேர்ந்தவர் ஆண்டியப்பன் என்ற வேலு. இவருக்கும் வீரவநல்லூரை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணமான நிலையில் மனைவி மற்றும் இளைய பெண் என மூவரும்  வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில காலமாக வேலு மது அருந்திவிட்டு மனைவியுடன் குடிபோதையில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ராமலெட்சுமி மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து அவ்வப்போது குடிபோதையில் தொந்தரவு செய்து வந்த நிலையில் நேற்று இரவும் ஆண்டியப்பன் மது அருந்தி வந்ததாக தெரிகிறது. அப்போது குடிபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு முற்றவே ஆத்திரத்தில் மனைவி ராமலட்சுமி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஆண்டியப்பனின் முகத்தில் சரமாரியாக வெட்டி உள்ளார்.


அதன்பின் வீரவநல்லூரில் உள்ள தனது மூத்த மகளின் கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆட்டோவை வரச்சொல்லி மூத்த மகளின் வீட்டிற்கு தாய் மற்றும் இளைய மகள் இருவரும் சென்றதாக கூறப்படுகிறது. காலை 9 மணி ஆகியும் வீடு திறக்காமல் இருந்துள்ளது. மேலும் வீட்டின் உள்ளே இருந்து முனங்கல்  சத்தம் கேட்ட நிலையில் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கதவை திறந்து பார்க்கும் பொழுது ஆண்டியப்பன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.


இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் பத்தமடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆண்டியப்பனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பத்தமடை காவல்துறையினர் தனது மகள் வீடான வீரவநல்லூரில் பதுங்கி இருந்த ராமலட்சுமியை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் தகராறு செய்த கணவனை ஆத்திரத்தில் மனைவி சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு மகள் வீட்டிற்கு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.