செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட அனுமந்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் சேகர், இவரது மகன் விவேக் 40. நேற்று இரவு செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பெண் தோழியிடம் மது அருந்த பணம் கேட்டு தராததால் குடிபோதையில் தனக்குத் தானே மருத்துவமனை வாயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்தார்.
இவர் ஏற்கனவே தனது மனைவி இறந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்பது குறிக்கத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை நிலவியது.
இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, “செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்குத் திருமணம் நடந்த சில நாட்களில் அவருடைய மனைவியை இவர் தீயிலிட்டுக் கொளுத்தி உள்ளார். இந்த வழக்கில் அவர் சிறை தண்டனை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலையாகியுள்ளார். விடுதலைக்குப் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே பழைய பொருட்களை பொறுக்குவது என அதன் மூலம் தனது பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தார்.
விக்னேஷ் குடித்துவிட்டு அடிக்கடி தனது காதலியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் காதலி மது அருந்த பணம் தராமல் தொடர்ந்து பேசாமல் இருந்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று திடீரென்று ஆத்திரமடைந்த விக்னேஷ் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு பற்றவைத்து உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவர் தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).