குற்றங்கள் சிறிதா பெரிதா... என்கிற கேள்வி போய்... குற்றம் செய்தவர் சிறியவரா... பெரியவரா... என்று கேட்கும் நிலைக்கு சமூகம் சீர்கெட்டு போய்விட்டது. சிறார் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களை கூர்நோக்கு இல்லங்கள் சீர்படுத்துவதாக தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் சிஸ்டத்தை மாற்ற வேண்டும். குற்றத்தை ஒடுக்க, தடுக்க புது மாதிரியான நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றெல்லாம் கருத்துக்கள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன. ஆனாலும் சம்பவங்கள் ஓய்ந்த பாடில்லை... இதோ இதுவும் அது மாதிரியான சம்பவம் தான்...




சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையைச் சேர்ந்தவர் 65 வயதான பார்வதி. இவர் தினமும் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். கடந்த அக்டோபர் 20ம் தேதி அசோக்நகர் 18 ம் அவென்யூ ஜங்ஷன் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், மூதாட்டி பார்வதியை தாக்கி விட்டு, அவர் அணிந்திருந்த நகையை பறித்துச் சென்றனர். 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து பார்வதி போலீசாரிடம் புகார் அளித்தார்.


புகாரை விசாரித்த கேகே நகர் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது நகைப்பறிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்த க்ளூ கிடைத்தது. அதன் அடிப்படையில் நெருங்கியதில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தான் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவன் அளித்த வாக்குமூலம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


தான் பிளஸ் 1 படித்து வந்ததாகவும், கொரோனாவால் பள்ளியை நிறுத்தியதாகவும், பின்னர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை எடுத்துக் கொள்ள பழகியதாகவும், பின்னாளில் அதற்கு அடிமையானதாகவும் கூறிய அந்த சிறுவன், அந்த சமயத்தில் தான் கொடுங்கையூரைச் சேர்ந்த 18 வயதை கடந்த ஒருவருடன் தனது நட்பு கிடைத்ததாகவும், அவருடன் நல்ல நட்பில் இணைந்ததாகவும் கூறி அந்த சிறுவன், செயின் பறிப்பு சம்பவத்தில் அவரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், அவரை வெளியே எடுக்க முடியாமல் அவரது பெற்றோர் சிரமப்படுவதாகவும் தெரிவித்தார். 




தன் நண்பரை ஜாமினில் எடுக்க பணம் தேவைப்பட்டதால், தானே அதற்காக செயின் பறிப்பில் ஈடுபட முயன்றாக கூறிய அந்த சிறுவன், தனக்கு இந்த தொழில் புதிது என்பதால், பெண் கஞ்சா வியாபாரி ஒருவரிடம் அதற்காக பிரத்யேக பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும், அவர் தனக்கு ஊக்கம், ஆக்கமும் கொடுத்தார் என்றும், சிறுவர்கள் சிக்கினால் சிறை செல்ல வேண்டியிருக்காது, எளிதில் தப்பித்து விடலாம் என ஐடியா கொடுத்ததாகவும் கூறிய அந்த சிறுவன், தான் பயிற்சியில் தேர்ந்த பின் செயின் பறிப்பில் இறங்கியதாக கூறினார்.


இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், சிறுவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பெண் கஞ்சா வியாபாரியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். 


இன்றைய முக்கியச் செய்திகள் சில...










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண