விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட நல்லா பாளையம், இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கீதா (28). சங்கீதாவின் கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் 11 வயது மகன் கமலேஷ் உடன் சங்கீதா தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் என்பவரை அணுகியுள்ளார் சங்கீதா. இறப்பு சான்றிதழ் வழங்க ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு தினமும் தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மூன்றாயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொண்டு இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளார் ஆரோக்கியதாஸ்.


இந்நிலையில் மாதாந்திர உதவித்தொகைக்காக சங்கீதா விண்ணப்பித்திருந்த நிலையில் அதனை கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் ரத்து செய்துள்ளார். இதுகுறித்து சங்கீதா கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது, அவர் தன்னுடைய பாலியல் இச்சைக்கு இணங்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட  சங்கீதா தன்னுடைய சகோதரர் சூர்யாவிடம் கூறியுள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் சூர்யா கேட்டபோது, அவரையும் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சங்கீதா மற்றும் அவரின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்


இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் விசாரணை மேற்கொண்ட விழுப்புரம் வருபாய் கோட்டாச்சியர் அமீது காஜா, குற்றச்சாட்டுக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்யதாஸ் கண்டாச்சிபுரம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சங்கீதா கூறுகையில்: கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் தினமும் தொலைபேசியில் அழைத்து தன்னை பாலியல் தொந்தரவு செய்வதாகவும், இரவிலும் தொலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்தார். பாலியல் இச்சைக்கு இனங்கவில்லை என்றால் உன்னை வாழ விட மாட்டேன் என மிரட்டுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.


புகார் மனுவில் கூறியிருப்பதாவது...


கடந்த 14/11/2011 அன்று விழுப்புரம் வட்டம் நல்லாபாளையம் இருளர் பாளையம் கிராமம் கே. ரத்தனம் குப்பு இவர்களின் மகன் ஐய்யனார் என்பவருக்கும் எனக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. எங்கள் இருவருக்கும் பிறந்த கமலேஷ் 11 வயதுடைய மகன் உள்ளான். கடந்த 13/09/2014 அன்று எனது கணவர் ஐய்யனார் உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். கடந்த 9ஆவது மாதம் நல்லா பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ஆரோக்கியதாஸ் அவர்களை நானும் எனது மாமியார் குப்பு அவர்களும் நேரில் சந்தித்து எனது கணவர் அய்யனார் இறப்பு சான்றிதழ் வேண்டும் என்று கேட்டோம். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் உன் கணவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது இறப்பு சான்றிதழ் எடுப்பதற்கு கஷ்டம் உன்னுடைய செல்போன் நம்பரை என்னிடம் கொடுத்து விட்டுப் போ நான் அப்புறம் பேசுகிறேன் என்று சொன்னார். என் செல் நம்பரை கொடுத்து விட்டு நானும் என் மாமியாரும் வீட்டுக்கு வந்து விட்டோம்.


சிறிது நேரத்தில் மேற்படி கிராம நிர்வாக அதிகாரி எனது கைபேசிக்கு தொடர்பு கொண்டு உன் கணவர் இறப்பு சான்று வாங்க வேண்டும் என்றால் ரூபாய் 5000 நீ கொடுக்க வேண்டும். அப்போதுதான் கிடைக்கும் என்று சொன்னார். என்னிடம் பணம் இல்லை அண்ணா நான் ரொம்ப கஷ்டப்படுறேன் என் மாமியாரிடம் கேட்கிறேன் என்று சொன்னேன். அதற்கு மேற்படி கிராம நிர்வாக அதிகாரி உன் மாமியார்ருக்கு தெரியக்கூடாது தெரியாமல் நீ கொண்டு வந்து கொடு நீ கொடுக்கும் 5000 பணம் எனக்கு மட்டும் கிடையாது மற்ற அதிகாரிகளுக்கும் நான் கொடுக்க வேண்டும் யாருக்கும் தெரியக்கூடாது என்று சொன்னார். அப்படி யாரிடமாவது நீ சொன்னால் உனக்கு கணவர் இறப்புச் சான்றிதழ் கிடைக்காது என்று சொன்னார். அதற்கு நான் என்னிடம் ஆயிரம் ரூபாய் இருக்கிறது அதை வேண்டுமானால் இப்பொழுது கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு மேற்படி கிராம நிர்வாக அதிகாரி நான் உன் வீட்டுக்கு வரவா என்று கேட்டார் வேண்டாம் நானே வருகிறேன் என்று சொன்னேன் முருகன் கோவில் அருகே நிற்கிறேன் வந்து கொடு என்று சொன்னார். நான் 1000 ரூபாய் கொண்டு போய் கொடுத்தேன் இரண்டு நாள் கழித்து இறப்புச் சான்றிதழ் என்னிடம் உள்ளது மீதமுள்ள பணத்தை என்னிடம் கொடுத்து விட்டு வாங்கிச் செல் என்று சொன்னார். நான் 2000 எடுத்துச் சென்று இதுதான் என்னிடம் இருக்கிறது இதற்கு மேல் என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன் அதை வாங்கி கொண்டு என் கணவர் இறப்புச் சான்றிதழ் என்னிடம் கொடுத்தார் நான் வாங்கி வந்து விட்டேன்.


மறுநாள் மேற்படி கிராம நிர்வாக அலுவலர் என் கைபேசிக்கு தொடர்பு கொண்டு விதவைகளுக்கு தமிழகஅரசாங்கம் கொடுக்கும் பணத்தை நான் வாங்கி தருகிறேன் ஓதியத்தூரில் உள்ள இ சேவை மையத்தில் உன் கணவர் இறப்புச் சான்றிதழ் ஆதார் அட்டை குடும்ப அட்டை: ஆகியவற்றை பதிவு செய்தால் என்னிடம் வரும் நான் உனக்கு விதவை ஊக்கத்தொகை பணம் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார். அதன்படி நானும் பதிவு செய்தேன். இரவு நேரத்தில் அடிக்கடி மேற்படி கிராம நிர்வாக அதிகாரி கைபேசிக்கு தொடர்பு கொண்டு உன் கணவன்தான் இல்லையே என்னுடன் அஞ்சு நிமிடம் சுகத்துக்கு வா என்று சொன்னார் அண்ணா நான் அப்படியெல்லாம் தப்பு செய்ய மாட்டேன் உங்களை என் அண்ணனாகத்தான் நினைக்கிறேன். அதுபோல் பேசாதீர்கள் என்று சொன்னேன் மீண்டும் மீண்டும் இரவு நேரங்களில் என் கைபேசிக்கு தொடர்பு கொண்டு பாலியல் சீண்டல் செய்து வந்தார் எனது உடன் பிறந்த தம்பியிடம் மேற்படி சம்பவங்களை சொன்னேன் உடனே எனது தம்பி அந்த கிராம நிர்வாக அதிகாரி ஆரோக்கியதாஸ் அவர்களின் செல்போன் நம்பரை கொடு என்று கேட்டான் நான் கொடுத்தேன் எனது தம்பி சூர்யா செல்போனில் இருந்து (9361329708) கிராம நிர்வாக அதிகாரி செல்போன் (7639526138) தொடர்பு கொண்டு எதற்காக எனது அக்காவை தனியாக அழைக்கிறீர்கள் தனியாவா தனியாவா! என்று எதற்காக அழைக்கிறீர்கள் ஆசைக்கு இணங்க சொல்லி வற்புறுத்தி வருவது நல்லதல்ல என்று சொன்னான் அதற்கு மேற்படி கிராம நிர்வாக அதிகாரி என்னடா என்னை மிரட்டி பார்க்கிறாயா? நீ ஓதியத்தூர்ல இருக்க மாட்ட உன்ன ஒழிச்சி கட்டிடுவேன் ஜாக்கிரதையா இரு என்று மிரட்டியுள்ளார்.


அதன் பிறகு நான் இ.சேவை மையத்தில் விதவைத் தொகை பெறுவதற்காக பதிவு செய்திருந்தேன் சிறிது நாட்கள் கழித்து இ மையத்துக்கு சேவை சென்று கேட்டேன் அவர்கள் கிராம நிர்வாக அதிகாரி உங்களுடைய மனுவை ரத்து செய்துவிட்டார் நீங்கள் உடனே கிராம நிர்வாக அதிகாரி அவர்களை போய் பாருங்கள் என்று சொன்னார்கள் கிராம நிர்வாக அதிகாரி அவர்களுக்கு தொடர்பு கொண்டு அண்ணே இ சேவை மையத்தில் நான் பதிவு செய்ததை நீங்கள் ரத்து செய்து விட்டீர்களா என்று கேட்டேன் அதற்கு கிராம நிர்வாக அதிகாரி நீ உன்னுடைய தம்பியிடம் நான் பேசியதை எல்லாம் எதற்காக சொன்னாய் அதற்காகத்தான் நான் கேன்சல் செய்தேன் உன் தம்பியை வைத்து விதவை பணம் பெற்றுக் கொள் என்று சொன்னார் ஐயா நான் மிகவும் ஏழை தின கூலிக்கு கஷ்டப்பட்டு வருகிறேன் விதவை பணம் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று சொன்னேன் அதற்கு மேற்படி கிராம நிர்வாக அதிகாரி உங்கள் சாதியைப் பற்றி எனக்கு தெரியும் எல்லோரும் நான் சொல்வதைக் கேட்பார்கள் நான் கிராம நிர்வாக அதிகாரி சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறேன் உன் தம்பியால் என்னை ஒன்னும் செய்ய முடியாது நீ என்னுடன் 5 நிமிடம் சுகத்திற்கு வந்தால் என்ன என்று கேட்டார் எனக்கு அந்த பழக்கம் இல்லை அப்படி தப்பு செய்து வரும் பணம் எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டேன்.


கைப்பேசிக்கு கிராம நிர்வாக அதிகாரி என்னை அழைக்கும் குறுந்தகவல் பதிவு எனது தம்பி சூர்யா கைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளேன் அதை குறுந்தகட்டில் பதிவு செய்து இந்த புகார் மனுவுடன் இணைத்துள்ளேன். பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் விழுப்புரம் வட்ட ஒருங்கிணைப்பாளர்பி.வி. ரமேஷ் அவர்களிடம் மேற்படி சம்பவங்களை நானும் எனது தம்பியும் கூறினோம் என்னை முழுமையாக விசாரித்து புகார் மனு தயாரித்து படித்துக் காண்பித்தார் நான் சொன்னது சரியாக உள்ளது. எனவே மேற்படி அரசு அதிகாரியான நல்லா பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ஆரோக்கிய தாஸ் என்பவர் நான் ஏழை பழங்குடி இருளர் சாதியை சார்ந்தவள் என்பதாலும் விதவை என்பதாலும் என்னிடம் 3000 லஞ்சம் பெற்றுக் கொண்டு என்னை பாலியல் தொல்லை செய்ததால் அவர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் 2005 இன் படி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அய்யா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.