விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உப்புவேலூரில் 3 பேர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு பறவைகளை வேட்டையாடிக்கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், திண்டிவனம் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனச்சரக அலுவலர் அஸ்வினி தலைமையில் திண்டிவனம் வன அலுவலர் முருகன், வனக்காப்பாளர் பச்சையப்பன், வனவர் திருமலை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது நாட்டுத் துப்பாக்கிகளால் பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.


அவர்களிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த ஓதியம்பட்டு நரிக்குறவர் காலனியை சேர்ந்த சங்கர் மகன் கவுதம்(வயது 22), வில்லியனூர் மூர்த்தி நகர், நரிக்குறவர் காலனியை சேர்ந்த செஞ்சியான் மகன் சூர்யா(24), ரமேஷ் மகன் சரவணன்(31) ஆகியோர் என்பதும், கடந்த சில நாட்களாக நாட்டுத்துப்பாக்கிகளால் சுட்டு பறவைகளை வேட்டையாடி, அதனை ஓட்டல் மற்றும் புதுச்சேரியில் உள்ள பார்களில் விற்பனை செய்து வந்ததும், அதில் நல்ல லாபம் கிடைத்ததால் தொழிலாகவே செய்து வந்ததும் தெரியவந்தது.


இதையடுத்து 3 வாலிபர்களையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த அன்றில் பறவை-16, இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன்-1, மாடப்புறா-6, உண்ணி கொக்கு-4 ஆகியவற்றையும், 2 நாட்டு துப்பாக்கிகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வன பகுதியில் வேட்டையாடினால் மிகவும் கடுமையான தண்டனை வழங்கபடும் என வன காவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண