விழுப்புரம் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


நீதிமன்றம் தீர்ப்பு:


கடந்த 3 ஆண்டுகளாக வழக்கை விசாரித்து வந்த  விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. திருவெண்ணெய்நல்லூர் அருகே 2020-ம் ஆண்டு சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொலை செய்யப்பட்டார். அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகிகள் முருகன் மற்றும் யாசகம் எனும் கலியபெருமாள் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


நடந்தது என்ன?


விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்த்தவர் ஜெயபால். அவருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ஜெயபால் வீட்டில் இல்லாத நேரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகள் ஜெயஸ்ரீயை அப்பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகன், சிறுமதுரை கிளை செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் தீ வைத்து எரித்தனர்.


80% காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலத்தில், முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும் முன்விரோதம் காரணமாக தன்னை தீவைத்து எரித்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுக கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டனர். தமிழக அரசு சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியது. இதனிடையே, வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என அப்போதையை எதிர்கட்சிகளான தி.மு.க. உள்ளிட்டவை வலியுறுத்தின.


ஆயுள் தண்டனை:


இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தான் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் முடிவில், அதிமுக முன்னாள் நிர்வாகிகள் முருகன் மற்றும் யாசகம் எனும் கலியபெருமாள் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.