விழுப்புரம்: மரக்காணத்தில பிரபல கள்ளச்சாராய வியாபாரியிடம் 550 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி புதுச்சேரி மாநிலம் அருகில் உள்ளது. இதனால் புதுச்சேரி பகுதிகளிலிருந்து கடத்தி வரப்படும் கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் உள்ளிட்ட மதுபானங்களில் விற்பனை எப்போதுமே அமோகமாக நடைபெறும். இந்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் கடற்கரை ஓரமுள்ள வம்பா மணல் பகுதியில் விற்ற விஷ சாராயத்தை குடித்துவிட்டு எக்கியர் குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் 50க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.


இதன் காரணமாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட துணை கண்காணிப்பாளர் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரையும் உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர். 


இதனைத் தொடர்ந்து மரக்காணம் மட்டும் சுற்றுப்புற பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை தலை தூக்கி இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பினார். இந்த நிலையில் மரக்காணம் அருகே கரிப்பாளையம் பகுதியில் பிரபல கள்ளச்சாராய வியாபாரி வீட்டில் சாராயக்கேன்கள் மறைத்து வைத்திருப்பதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.


இதனைத் தொடர்ந்து மரக்காணம் காவல் ஆய்வாளர் பாபு மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்படை போலீசார் கரிப்பாளையம் பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட நபரின் வீட்டு தோட்டத்தில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 கேன்கள் மற்றும் 100 எம்.எல் அளவு கொண்ட 270 சாராய பாக்கெட்டுகள் இருந்துள்ளது. போலீசார் இதனை பறிமுதல் செய்து, கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பிரபல கள்ளச்சாராய வியாபாரி லோகு மகன் ஞானவேல் வயது (24) என்பவரை கைது செய்தனர். தொடந்து அவரிடம் இந்த சாராயம் எங்கிருந்து வந்தது இதனை மொத்தமாக விற்பனை செய்த கள்ளச்சாராய வியாபாரிகள் யார் யார்? அவர்கள் எந்த இடத்தில் உள்ளனர். இதே போல் மரக்காணம் மட்டும் சுற்றுப்புற கிராமங்களில் யார் யார் மொத்தமாக கள்ளச்சாராயத்தை இறக்கி விற்பனை செய்து வருகின்றனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.