காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி கோமதி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்தக்கடை மலையாண்டிபுரத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். அதற்கான பணியை  அலங்காநல்லூரை சேர்ந்த முருகன் என்ற பொறியாளரிடம் மொத்தமாக ஒப்படைத்துள்ளார். ஆனால் முருகன் அளவுக்கதிகமான பணத்தைப் பெற்றுக் கொண்டு குறித்த நேரத்தில்  கட்டுமான பணிகளை முடிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். 


இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோமதி புகார் ஒன்றை அளித்தார். அப்போது அங்கு காவல் ஆய்வாளராக ஆனந்த தாண்டவம் என்பவர் பணியாற்றியுள்ளார். அவர் முருகன் மற்றும் கோமதியை வரவழைத்து  புகார் மனு குறித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ஆனந்த தாண்டவத்திற்கும், கோமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 


இதனையடுத்து வீடு கட்டுவதற்காக வைத்துள்ள பணத்தினை தன்னிடம் தருமாறு ஆனந்த தாண்டவம் கேட்டுள்ளார். வீட்டைக் கட்டித் தருவார் என்ற நம்பிக்கையில் கோமதி மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் கோமதியுடையாக பழக்கத்தால் அவரது வீட்டுக்கு சென்ற ஆனந்த தாண்டவம், அங்கு கோமதிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,  யாருக்கும் தெரியாமல் அருகிலுள்ள கோவிலில் வைத்து தாலி கட்டியுள்ளார். 


பணத்தையும் கொடுக்காமல், பாலியல் தொல்லையும் அளித்து மன உளைச்சலுக்கு ஆளான தான் 2 முறை தற்கொலை முயற்சி மேற்கொண்டு அருகிலுள்ளவர்களால் காப்பாற்றப்பட்டதாக கோமதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து   முதல்வரின் தனிப்பிரிவு, மனித உரிமை ஆணைய தலைவர், தென்மண்டல காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையர் என அனைவரிடமும் அஞ்சல் வழியாக புகார் அளித்தார். 


கோமதி புகார் குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஆனந்த தாண்டவத்தை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண