செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேரில் ஆஜரானார்.

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே காரணை கிராமம் உள்ளது. இங்கு,  பஞ்சமி நிலம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் இறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நினைவஞ்சலி கூட்டம் நடக்கும். கடந்த 2012ம் ஆண்டு, பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நடந்த நினைவஞ்சலி கூட்டத்திற்கு, திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தனியார் நிலம் வழியாக சென்றனர். அப்போது, தனியார் நிலத்தை தலைவர் மற்றும் கட்சியினர் சேதப்படுத்தியாக கூறப்படுகிறது.

 

அதே பகுதியைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி என்பவர், மாமல்லபுரம் காவல் நிலையத்தில், தன் நிலத்தை சேதப்படுத்தியதாக புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து, திருமாவளவன் உள்ளிட்ட, 14 பேர் மீது, வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு, செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ரீனா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், திருமாவளவன் ஆஜராகவில்லை.

 

அவரது சார்பில், வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, திருமாவளவன் உள்ளிட்டவர்கள், நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது திருமாவளவன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். இதனை அடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒருபுறம் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய விடுதலை சிறுத்தை கட்சி தொல் திருமாவளவன் சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை அடுத்து செய்தியாளரை சந்தித்த திருமாவளவன் தெரிவித்ததாவது : செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு, நினைவஞ்சலி செலுத்த சென்ற பொழுது காவல்துறையினர் பொய் வழக்கு புனைந்தார்கள். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று நான் உட்பட 14 பேர் நேரில் ஆஜராகினோம். தற்பொழுது இந்த வழக்கு அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.