வன்னியர் சங்க பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதம் உள்ள அனைவரையும்  கைது செய்ய வலியுறுத்தி வன்னியர் சங்கம் மற்றும் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மயிலாடுதுறை கொத்தத்தெருவை சேர்ந்தவர் ரவி என்பவரின் 31 வயதான மகன் கண்ணன். ஆம்புலன்ஸ் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவருக்கும், மயிலாடுதுறை கலைஞர் காலனியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹோட்டலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக கண்ணன், கதிரவனை தாக்கியுள்ளார். இதுகுறித்து, கதிரவன் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கண்ணன் மீது ஏற்கெனவே பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதால், அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துவிட்டு கடந்த 15 நாள்களுக்கு முன்பு விடுதலை ஆகி வெளியில் வந்துள்ளார். 




இந்நிலையில், நேற்று இரவு 11.40 மணியளவில் கண்ணன்  தனது நண்பர்களான நல்லத்துக்குடியைச் சேர்ந்த 19 வயதான ரஞ்சித், டபீர் தெருவைச் சேர்ந்த 22 வயதான திவாகர் ஆகியோருடன் இரண்டு இருசக்கர வாகனத்தில் கடைவீதியில் பீடா வாங்கிக் கொண்டு திரும்பி வந்துள்ளார். அப்போது, புதிய பேருந்து நிலையம் அருகே கண்ணன் உள்ளிட்ட மூவரையும் வழிமறித்த கலைஞர் காலனியை சேர்ந்த கதிரவன், அஜித், அடங்கிய கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து, கண்ணனுடன் வந்த நண்பர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து அருகில் இருந்த கலைஞர் காலணியில் இருந்து அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து  தப்பிக்க முயற்சி செய்த கண்ணனை விரட்டிச் சென்று கழுத்து, தலை, மார்பு உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பினர். 




இச்சம்பவம் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையிலான காவலர்கள், கண்ணனின் உடலை  கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் கொலை வழக்குப் பதிந்து கதிரவன் உள்ளிட்ட 20 பேரை தேடிவந்தனர். இந்நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட கதிரவன், சேது, சந்தோஷ், ரஞ்சித், முருகவேல், கார்த்திக், துரை, குணசேகரன், பிரபாகரன் உள்ளிட்ட 12 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். எஞ்சிய நபர்களை பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 




இச்சம்பவத்தையடுத்து பதற்றத்தை தணிக்க மயிலாடுதுறை நகர் முழுவதும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குவிந்தனர். தொடர்ந்து உறவினர்களுடன் மருத்துவமனை அருகே மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்தால்தான் உடலை பெற்றுச்செல்வோம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் டிஐஜி கயல்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ஆகியோர் வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும், மயிலாடுதுறையில் முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி கண்ணன் படுகொலை சம்பவத்தின் தொடர்ச்சியாக  அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் மயிலாடுதுறை நகர பகுதிகளில் உள்ள ஐந்து டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக நகரம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண