தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டு, 14 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள 3 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


                                   

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, சாயர்புரம், குரும்பூர், கயத்தாறு, சேரகுளம், திருச்செந்தூர், புதுக் கோட்டை தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போனதாக ஆடுகளின் உரிமை யாளர்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  ஆடுகளை திருடிய எதிரிகளை கண்டுபிடித்து விரைந்து கைது செய்ய  தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினர் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு, வேம்பார் சோதனை சாவடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் இருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சாத்தையன் மகன் செல்வராஜ் (55) மற்றும் காரைக்குடி கண்டனூர் ரோடு பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் ஆறுமுகம் (52) ஆகிய 2 பேரும் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடுகளை அவர்களது கார்களில் திருடி சென்றது தெரியவந்தது.உடனே மேற்படி தனிப்படை போலீசார் செல்வராஜ் மற்றும் ஆறுமுகம் ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த 14 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட TN 38 CE 1066 – (Innova Christa), TN 38 CT 5887 – (Duster), TN 04 Q 3739 – (Innova) ஆகிய எண்களை கொண்ட ரூபாய்  50,00,000/- (50 லட்சம்) மதிப்புள்ள 3  கார்களையும் பறிமுதல் செய்தனர்.


                                   

மேலும் விசாரணையில் இவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரம் பகுதியை சேர்ந்த முகம்மது நாசர் என்பவரின் மகன்களான முகம்மது அராபத் மற்றும் ஆசிக் ஆகிய இருவரும் காரைக்குடி என்.ஜி.ஓ காலனி பகுதியில் மட்டன் கடை நடத்தி வருகின்றனர். இந்த மட்டன் கடைக்கு ஆடுகளை திருடி கொண்டு வந்து கொடுப்பதற்காக முகம்மது அராபத்தின் கூட்டாளிகளான பாண்டிச்செல்வம், பாலமுருகன் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகிய 4 பேரும், அதேபோன்று ஆசிக் என்பவரின் கூட்டாளிகளான செல்வராஜ், ஆறுமுகம் மற்றும் ஆசிக்ராஜா ஆகிய 4 பேரும் என மொத்தம் 8 பேரும் சேர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆடுகளை திருடி வந்துள்ளது தெரியவந்தது. மேலும் மேற்படி எதிரிகள்  தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 11 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 20 இடங்களில் ரூபாய் 10,10,000/- மதிப்புள்ள 101 ஆடுகளை திருடியதும் தெரியவந்துள்ளது.


                                      

மேலும் மேற்படி மற்ற நபர்களில் முகம்மது அராபத், பாண்டிச்செல்வம் மற்றும் பாலமுருகன் ஆகிய 3 பேர் புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி காவல் நிலைய கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து தற்போது சிறையில் உள்ளனர். மேலும் இது தொடர்பாக சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.