மதுரை  மேலூரை அடுத்த சேக்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா.  இவருக்கு  மனநலம் குன்றிய  பாதிப்பு  உள்ளது. இவரது மூன்று குழந்தைகளும் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக ஆர்வலர் அசாருதீன் என்பவர் மூலமாக, ரிசர்வு லைன் பகுதியில் உள்ள தனியார்  அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர்.

 



 

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் மூன்றாவது குழந்தையான மாணிக்கம் என்ற ஒரு வயது ஆண் குழந்தைக்கு கடந்த 13ஆம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, நரிமேடு நகர்புற சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா உறுதியானதால் அரசு கொரோனா மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு செல்வதற்கான பரிந்துரை கடிதம் தொடர்பான ஆவணம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.

 

 


 

இந்நிலையில் நேற்று முன்தினம்  கொரோனா பாதிப்பால் குழந்தை மாணிக்கம் உயிரிழந்த நிலையில் தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக கூறி  தத்தனேரி மயான ஆவணங்கள் மற்றும் புதைக்கப்பட்ட படத்தையும் சமூக ஆர்வலருக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனை பார்த்த அசாருதீன் ஆவணங்களில் சந்தேகம் இருப்பதாகவும், குழந்தை காணாமல் போனதாகவும் கூறி தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அன்று இரவே மாவட்ட குழந்தை நல அலுவலர் மற்றும் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது எல்லாமே போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் என தெரியவந்தது. இந்நிலையில் புகாருக்குள்ளான தனியார் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.



 

இந்நிலையில் காப்பக பணியாளர்களிடம் தல்லாகுளம் போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை இஸ்மாயில்புரத்தை  சேர்ந்த 47 வயது நகைக்கடை உரிமையாளரிடம் ஜூன் 13-ம் தேதி 1 வயது ஆண் குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது. மேலும், 2 வயது  பெண் குழந்தை கடந்த 16 ஆம் தேதி கருப்பாயூரணி அருகேயுள்ள கல்மேடு பகுதியை சேர்ந்த 37 வயது சில்வர் பட்டறை தொழிலாளரிடம் விற்கப்பட்டதும் தெரியவந்தது.

 

 



 

இதனை தொடர்ந்து இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு, குழந்தைகளை விலைக்கு வாங்கிய நபர்களையும் கைது செய்துள்ளனர். பின், பெற்றோர்கள் முன்னிலையில் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர் குழந்தைகளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதயம் அறக்கட்டளைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில்,  தலைமறைவாக உள்ள அறக்கட்டளை நிர்வாகி சிவக்குமார் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.