கரூரில் உள்ள ஒரு வங்கியில் உதவி மேலாளராக ஒரு பெண் அதிகாரி பணியாற்றி வருகிறார். அவரது கணவனின் செல்போனுக்கு சம்பவத்தன்று ஒரு அடையாளம் தெரியாத பெண்ணின் ஆபாச படம் வந்தது. பிறகு ஒரு மர்ம ஆசாமி அவரிடம், உனக்கு அனுப்பிய படத்தைப்போல உனது மனைவியின் ஆபாச படத்தையும் வலைதளத்தில் அனுப்புவேன். அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் தனக்கு பணம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த வங்கி அதிகாரியின் கணவன் google pay மூலம் ரூ 49 ஆயிரம் அனுப்பியுள்ளார். இதுபற்றி  அறிந்த பெண் வங்கி அதிகாரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். 





இது தொடர்பாக அவர்கள் பேசிய செல்போன் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனியார் வங்கி உதவி மேலாளரின் கணவர் லோகாண்டோ என்ற இணைய தளத்தில் ஆபாச விளம்பரம் பார்த்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அவருடைய செல்போன் எண்ணை வைத்தும், அவர்களுடைய தகவல்களை திரட்டி, குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை சேகரித்து வைத்துக் கொண்டனர்.




வங்கி அதிகாரியின் கணவரின் செல்போன் எண்ணிற்கு இணைய தளத்தில் உள்ள ஆபாச புகைப்படங்களை எடுத்து அதில் ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது போன்று உன் மனைவியின் ஆபாச புகைப்படத்தையும் இணைய தளத்தில் வெளிவிட்டுவிடுவோம் என மிரட்டியும், அவ்வாறு வெளியிடாமல் இருக்க 49000 ரூபாய் google pay அனுப்பும் படி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அவர் 49000 ரூபாய் அனுப்பி வைத்துள்ளது தெரிய வந்தது.




இதற்கு பயன்படுத்திய செல்போன் எண்கள், வங்கி கணக்கு ஆகியவற்றை கண்டறிந்த சைபர் கிரைம் போலீசார் பொள்ளாச்சியை சார்ந்த கட்டிட பொறியாளர் பிரசாந்த் என்ற 27 வயது இளைஞரையும், அவருக்கு உதவியாக இருந்த அஜீத் குமார் என்கின்ற 49 வயது கொத்தனாரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 லட்சம் ரொக்கம், இரு சக்கர வாகனம், பாஸ்போர்ட், 4 செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  ஆபாச இணைய தளங்களை பார்க்கும் ஆண்களின் சபலத்தை பயன்படுத்தி இந்த நபர்கள் பணம் பறித்து இருப்பது தெரிய வந்துள்ளது.


பல்வேறு மோசடி ஆசாமிகள் உலாவி வரும் நிலையில் கரூர் அருகே ஆபாசப்பட அனுப்பி நூதன முறையில் நாற்பத்தி ஒன்பது ஆயிரம் ரூபாயை பரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.