தனது மகளிடம் டியூசன் கற்க வந்த சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் தனது பெண்ணிடம் டியூசன் கற்க வந்த சிறுமிகளிடம் முதியவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அப்பகுதி காவல் துறையினருக்கு புகார் வந்தது.


இந்நிலையில், பாதிக்கப்பட்ட 11 மற்றும் 12 வயதுடைய சிறுமிகள்  டியூசன் ஆசிரியையின் தந்தையை அடையாளம் காண்பித்ததை அடுத்து, அந்நபர் கைது செய்யப்பட்டார்.


இச்சம்பவம் குறித்துப் பேசிய துர்க் மாவட்ட தலைமைக் காவல் கண்காணிப்பாளர் பிரதாப் குமார், "ஆசராம் பாபு நகரில் தனது மகள் வீட்டில் நடத்தும் டியூசன் வகுப்புகளுக்கு படிக்க வரும் 11,12 வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் வந்ததை அடுத்து முதியவர் கைது செய்யப்பட்டார்" என்று தெரிவித்துள்ளார்.


மேலும் “ஜமுல் பகுதியைச் சேர்ந்த பெண் ஆசிரியை தன் வீட்டில் குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்கிறார். அப்பகுதியைச் சேர்ந்த பல குழந்தைகள் அவரது டியூசனுக்கு செல்கிறார்கள். 


பாடம் எடுப்பதற்கு இடையே ஆசிரியை டியூசன் வீட்டுவேலை செய்யப் போகும்போது, ​​அவரது தந்தை ஷஹாதத் ஹுசைன், சாக்லேட் கொடுத்து சிறுமிகளை தனியே அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.


முன்னதாக ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறியபோது, ​​அந்தப் பெண் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதற்குப் பிறகு, வேறு சில சிறுமிகளும் இந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்" என்று கூறினார்.


இந்தச் சம்பவம் முன்னதாக வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, பல சிறுமிகளின் குடும்பத்தினர் ஜமுல் காவல் நிலையத்துக்கு வந்து ஷஹாதத் ஹுசைன் மீது புகார் அளித்துள்ளனர். மேலும் ஷஹாதத் ஹுசைனை கைது செய்ய வேண்டும் என்றும் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


இந்நிலையில், பிரிவு 354 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


போக்சோ சட்டம் : 


16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.


18 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக இந்த போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் குறித்த தகவல்கள் பின்வருமாறு:



  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்

  • Aggravated penetrative sexual assault - தீவிரமான பாலியல் தாக்குதல்

  • Sexual Assault - பாலியல் தொல்லை

  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை

  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு

  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்


இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.



  • 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை

  • இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை

  • 12 வயதுக்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)