திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் அருகே சீதேவிமங்கலத்தை சேர்ந்தவர் மாதவன் என்கின்ற மண்டை வெட்டு மாதவன் (51). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் இருந்தன. தற்போது அனைத்து கொலை வழக்குகளில் இருந்தும் விடுதலையாகி வெளியே உள்ளார். திருச்சி மாவட்டத்தின் பிரபல ரவுடியான மண்ணச்சநல்லூர் குணாவின் கூட்டாளியான இவர், தற்போது சிறிய அளவிலான கட்டப்பஞ்சாயத்துகளில் மட்டும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருச்சி மாநகரம் திருவானைக்காவல் சன்னதிவீதி தீட்ஷதர் தோப்பில் உள்ள கைலாச மண்டபம் முன்பு கொலைச் செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.  மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்க்கொண்டனர். இதில் முதல்கட்ட தகவலாக போலீஸ் கூறியது..  நேற்றிரவு அவரை தீட்ஷதர் தோப்பிற்கு அழைத்து வந்த மர்ம நபர்களுடன், மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் மாதவனை சரமாரியாக வெட்டி, கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது என்றனர்.




மேலும், தகவலறிந்த, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதாலட்சுமி, காவல்துறை ஆய்வாளர் அரங்கநாதன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து தடயங்களை சேகரித்தனர். மாதவனுக்கு நன்கு பழக்கமான நபர்கள் அவரை அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி திருவானைக்காவலில் பிரபல ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.